மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பேராசிரியருக்கு சரமாரி அடி உதை


மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து  சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பேராசிரியருக்கு சரமாரி அடி உதை
x
தினத்தந்தி 18 Aug 2018 7:21 AM GMT (Updated: 18 Aug 2018 7:23 AM GMT)

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பேராசிரியரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியது. #MahatmaGandhiUniversity #Motihari

மொடிஹரி,

பீகாரில், மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பேராசிரியரை ஒரு கும்பல் அவரது வீட்டிற்கு சென்றே சரமாரியாக தாக்கியுள்ளது. பலத்த காயமுற்ற பேராசிரியர் மேல் சிகிச்சைக்காக பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த விவரம் வருமாறு, மொடிஹரியிலுள்ள மகாத்மா காந்தி பல்கலைகழகத்தில் பேராசிரியராய் பணி புரியும் ஒருவர், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச்சடங்கு குறித்து, சர்வாதிகாரத்தின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அடல் ஜீ யின் நித்திய பயணம் தொடங்கியது என சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் கருத்து பதிவிட்டிருந்த சில மணி நேரங்களிலேயே பேராசிரியர் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு சென்ற ஒரு கும்பல், மூன்றாவது தளத்தில் வசிக்கும் பேராசிரியரின் வீட்டிற்குள் சென்று அவரை வெளியே இழுத்து வந்து சரமாரியாக தாக்கியது. மேலும் அந்த கும்பல் பேராசிரியரை உயிரோடு எரிக்க முயன்றது. இந்நிலையில் கும்பலின் தாக்குதலால் நிலைகுலைந்த பேராசிரியர் படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக பாட்னா எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே கும்பலின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பேராசிரியர் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ”வாஜ்பாய் குறித்து கருத்து தெரிவித்ததற்காக மட்டும் என்னை அவர்கள் தாக்கவில்லை. பல்கலைகழகத்தில் துணை வேந்தருக்கு எதிராக குரல் கொடுத்ததற்காகவும் தான் இந்த தாக்குதலை என் மீது நடத்தினர். பல்கலைகழகத்தில் புதிய ஆசிரியர்களை நியமிப்பது தொடர்பாக துணைவேந்தருக்கும், பேராசிரியர்களுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. துணைவேந்தரை எதிர்த்து நாங்கள் தர்ணா போராட்டம் நடத்தி வந்தோம். மேலும் அவருக்கு எதிராக குரல் கொடுத்து வந்ததால் நான் கடந்த சில நாட்களாக தாக்குதல்காரர்களால் எச்சரிக்கப்பட்டு வந்தேன்” எனக் கூறினார்.

Next Story