விளைநிலங்களில் வைரங்களைத் தேடும் விவசாயிகள்!


விளைநிலங்களில் வைரங்களைத் தேடும் விவசாயிகள்!
x
தினத்தந்தி 18 Aug 2018 8:48 AM GMT (Updated: 18 Aug 2018 8:48 AM GMT)

ஆந்திர மாநிலத்தில் விளைநிலங்களில் விவசாயிகள் வைரங்களைத் தேடுகின்றனர்.

பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், ஆந்திர மாநிலத்தின் ராயலசீமா பகுதியில் அமைந்துள்ள வஜ்ரகரூர், பகிதிராயீ, ஜொன்னாகிரி போன்ற கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளும் வேறு பலரும் விளைநிலங்களுக்குப் படையெடுக்கின்றனர். வைரக் கற்களைத் தேடித்தான் இந்தப் படையெடுப்பு.

குறிப்பிட்ட ராயலசீமா பகுதி, பழங்காலம் முதலே கனிமவளத்துக்குப் பெயர் பெற்றுத் திகழ்கிறது.

கர்னூல், கடப்பா, ஆனந்தப்பூர் மாவட்டங்களில் வைரச் சுரங்கங்கள் அமைந்திருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு அமைப்பின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இங்கு வைரங்களைத் தேடும் கிராமவாசிகள் யாருக்கும், விலை உயர்ந்த கற்கள் குறித்து அறிவியல்பூர்வமாக எதுவும் தெரியாது. வழக்கத்துக்கு மாறாகத் தோன்றும் கற்கள் அனைத்தையும் எடுத்து, வைரமாகத்தான் இருக்கும் எனும் நம்பிக்கையில் தங்கள் பைகளுக்குள் போட்டுக்கொண்டு போகின்றனர்.

வைர வேட்டையில் ஈடுபட்டுள்ள வன்னுருசா என்பவர், நிலத்தில் சூரியன் மற்றும் நிலவின் கதிர்கள் விழுவதை அடிப்படையாக வைத்தே வைரக்கற்களைக் கண்டறிய முடியும் என்கிறார்.

‘‘கரியமிலக் கல் உள்ள பகுதிகளில் வைரம் இருக்கும். வைரத்தைத் தேடும் முன், அந்தக் கற்களைத் தேட வேண்டும். இந்தக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் ஆங்கிலேயர்கள் அகழ்வாராய்ச்சி செய்தனர்’’ என்கிறார் அவர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு ஒரு வைரத்தைக் கண்டுபிடித்ததாக அவர் சொல்கிறார்.

கிராமவாசிகள், வைரம் என்று தாங்கள் நம்பும் கற் களைப் பொறுக்கிச் சென்று இடைத்தரகர்களிடம் கொடுக்கின்றனர். அவர்கள் கற்களின் அளவைப் பொறுத்து ஒரு சொற்ப தொகையைக் கொடுக்கின்றனர்.

ராயலசீமா பகுதியில் வைரம் உள்ளது குறித்து பல்வேறு கதைகள் நிலவுகின்றன. கிருஷ்ண தேவராயர் காலத்தில் இங்கு வைர வணிகம் அமோகமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

விஜயநகரப் பேரரசு சரிந்தது, இயற்கைப் பேரிடர் போன்றவற்றால் வைர வணிகம் காலப்போக்கில் ஒழிந்ததாகவும், மழைக் காலங்களில் மண்ணின் மேற்பரப்பில் இருக்கும் வைரக் கற்களில் சில மேலே தெரியும் என்றும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இப்பகுதியில் வைர வணிகம் நிகழ்ந்ததற்கு வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன.

ஆந்திராவில் உள்ள கர்னூல், ஆனந்தப்பூர் மாவட்டங்களும், தெலுங்கானாவில் உள்ள மெகபூப்நகர் மாவட்ட மும் கனிமவளத்துக்குப் பெயர் பெற்றவை என்றும், பூமியின் கீழ் அடுக்குகளில் புவியியல் மாற்றங்கள் நிகழும்போது உள்ளே இருக்கும் வைரக்கற்கள் மேலே வரலாம் என்றும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆக, வைரங்களைத் தேடும் படலம் தொடர்கிறது! 

Next Story