பெண் தோழியிடம் மன்னிப்பு கோரி 300 பேனர்களை சாலையின் நடுவே வைத்த இளைஞர்


பெண் தோழியிடம் மன்னிப்பு கோரி 300 பேனர்களை சாலையின் நடுவே வைத்த இளைஞர்
x
தினத்தந்தி 19 Aug 2018 7:02 AM GMT (Updated: 19 Aug 2018 7:02 AM GMT)

பெண் தோழியிடம் மன்னிப்பு கோரி 300 பேனர்களை சாலையின் நடுவே தடுப்பு பகுதியில் இளைஞர் ஒருவர் வைத்துள்ளார்.

புனே,

மகாராஷ்டிராவை சேர்ந்த 25 வயது இளம் தொழிலதிபர் நிலேஷ் கெடேகர்.  இவர் தனது பெண் தோழியிடம் ஏதோ ஒரு விசயத்திற்காக சண்டை போட்டு உள்ளார்.  அதன்பின் அவரிடம் மன்னிப்பு கேட்க நினைத்துள்ளார்.  அதற்காக புதிய முறையில் யோசித்துள்ளார்.

அதன்பின் தனது நண்பரான விலாஸ் ஷிண்டேவின் உதவியுடன் அந்த திட்டத்தினை செயல்படுத்தி உள்ளார்.  அந்த திட்டத்தின்படி, பலகை ஒன்றில் பெண் தோழியின் பெயருடன், நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளது.  அதன் முடிவில் 2 ஆச்சரிய குறிகளும், தொடர்ந்து சிவப்பு நிறத்தில் இதயம் ஒன்றும் வரையப்பட்டு உள்ளது.

இதுபோன்று 300 பேனர்களில் எழுதப்பட்டு அவை புனே நகரின் அருகே பிம்ப்ரி சிஞ்சுவாட் என்ற பகுதியில் பரபரப்பு நிறைந்த சாலையின் நடுவே அமைந்த தடுப்பு பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது.

ஏனெனில் அந்த பெண் தோழி மும்பையில் இருந்து இரவில் புறப்பட்டு காலையில் அந்த பகுதி வழியே வருவார்.  அவர் இந்த பேனர்களில் ஒன்றையாவது காண கூடும் என்ற நோக்கத்தில் நிலேஷ் திட்டமிட்டு இதனை செய்துள்ளார்.

இதுபற்றி அறிந்த போலீசார் ஷிண்டேவை பிடித்து விசாரித்தனர்.  பின்னர் அவரின் உதவியால் நிலேஷையும் போலீசார் விசாரித்தனர்.  சட்டவிரோத  முறையில் பேனர் வைத்ததற்காக மற்றும் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்துவது ஆகியவற்றுக்காக பிம்ப்ரி நகர நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளது.

இதனால் பெண் தோழியை சமரசப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட அவர் வேறு சிக்கலில் சிக்கியுள்ளார்.


Next Story