பீகாரில் வாலிபர் கொலை; சந்தேகத்தில் இளம்பெண்ணை அடித்து, நிர்வாணப்படுத்தி, தெருவில் இழுத்து சென்ற கும்பல்


பீகாரில் வாலிபர் கொலை; சந்தேகத்தில் இளம்பெண்ணை அடித்து, நிர்வாணப்படுத்தி, தெருவில் இழுத்து சென்ற கும்பல்
x
தினத்தந்தி 21 Aug 2018 3:21 AM GMT (Updated: 21 Aug 2018 3:21 AM GMT)

பீகாரில் வாலிபர் கொலையில் தொடர்பு இருக்கும் என்ற சந்தேகத்தில் இளம்பெண்ணை கும்பல் ஒன்று அடித்து, நிர்வாணப்படுத்தி, தெருவில் இழுத்து சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்ரா,

பீகாரில் போஜ்பூர் மாவட்டத்தில் பியா காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட இடத்தில் ரெயில்வே தண்டவாளம் அருகே உடல் ஒன்று கிடந்துள்ளது.  இதில் அந்த நபர் விமலேஷ் ஷா (வயது 19) என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஷாவின் சொந்த கிராமம் ஆன தாமோதர்பூர் பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு நேற்று சென்றனர்.  அவர்களில் சிலர், அருகிலுள்ள சிவப்பு விளக்கு பகுதியில் வசிப்பவர்கள் இளைஞரை அடித்து கொன்றிருக்க கூடும் என சந்தேகம் அடைந்துள்ளனர்.

இதனை அடுத்து அங்கு சென்ற கிராமத்தினர் எண்ணற்ற கடைகளுக்கு தீ வைத்தனர்.  பல்வேறு குடியிருப்புவாசிகள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.  பின் ஒரு பெண்ணை வீட்டில் இருந்து வெளியே இழுத்து தெருவுக்கு கொண்டு வந்துள்ளனர்.  அவர்கள் அந்த பெண்ணை அடித்து, உதைத்து பின்னர் ஆடைகளை கிழித்தெறிந்து உள்ளனர்.  அதன்பின் அந்த பெண் நிர்வாண நிலையில் தெருவில் இழுத்து செல்லப்பட்டு உள்ளார்.

அந்த வழியே சென்ற ரெயில் ஒன்றின் மீது கும்பல் ஆனது கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.  இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் கும்பலை கலைந்து போக செய்ய வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

தொடர்ந்து ஏற்பட்ட பதற்றத்தினை தணிக்க அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.  இதுபற்றி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீஸ் சூப்பிரெண்டு ஒருவர் கூறினார்.


Next Story