பாலியல் துன்புறுத்தல் வழக்கை வாபஸ் பெறாத மாணவி கல்லூரி முன் கல்லால் அடித்து கொலை
மத்திய பிரதேசத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கை வாபஸ் பெறாத கல்லூரி மாணவி பொதுமக்கள் முன்னிலையில் வாலிபரால் கல்லால் அடித்து கொல்லப்பட்டார்.
சியோனி,
மத்திய பிரதேசத்தில் சியோனி நகரில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மகளிர் கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு 23 வயது கல்லூரி மாணவி ஒருவர் படித்து வந்துள்ளார்.
இவரை அனில் மிஷ்ரா (வயது 38) என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதுபற்றி மாணவி போலீசில் புகார் அளித்து உள்ளார். இந்த பாலியல் வழக்கை திரும்ப பெறும்படி மாணவியை அனில் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மதியம் கல்லூரிக்கு மாணவி சென்றுள்ளார். கல்லூரி அருகே வந்த அவரை பைக்கில் இருந்து கவனித்த அனில் பின்தொடர்ந்து சென்று மாணவியின் முடியை பிடித்து இழுத்து சாலையோரம் தள்ளியுள்ளார். அருகில் கிடந்த பெரிய கல் ஒன்றை எடுத்து மாணவியை தாக்கியுள்ளார்.
பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தினை கண்ட பலர் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் ஓடி சென்று மிஷ்ராவை மடக்கி பிடித்தனர். அதன்பின் அந்த மாணவி படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.
இதனை அடுத்து அனில் மிஷ்ராவை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.