விபத்தில் பெற்றோர் பைக்கில் இருந்து விழுந்துவிட குழந்தையுடன் யாருமின்றி 300 மீட்டர் தானாக ஓடிய பைக்


விபத்தில் பெற்றோர் பைக்கில் இருந்து விழுந்துவிட குழந்தையுடன் யாருமின்றி 300 மீட்டர் தானாக ஓடிய பைக்
x
தினத்தந்தி 25 Aug 2018 9:24 AM GMT (Updated: 25 Aug 2018 9:24 AM GMT)

பெற்றோர் பைக்கில் இருந்து கீழே தவறி விழுந்துவிட, அமர்ந்திருந்த குழந்தையுடன் யாருமின்றி பைக் 300 மீட்டர் தானாக ஓடிச் சென்று கீழே விழுந்த சம்பவம் நடந்துள்ளது.


கர்நாடக மாநிலம், தும்கூரு  நெடுஞ்சாலையில் ஒரு கணவன் மனைவி, தங்கள்  3 வயது குழந்தையுடன் பைக்கில் சென்றனர். குழந்தையை பெட்ரோல் டேங்கின் மீது அமரவைத்து இருந்தனர். அப்போது, இவர்கள் சென்ற பைக்குக்கு முன்னே சென்ற மற்றொரு பைக் திடீரென பிரேக் போட்டு நின்றவுடன், இவர்களால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், அந்த பைக்கின் மீது மோதிவிட்டனர்.

இதில் மோதிய வேகத்தில் பைக்கில் இருந்த கணவனும், மனைவியும் கீழே விழுந்தனர். ஆனால், பைக் கீழே விழாமல், அதே வேகத்தோடு பைக்கின் பெட்ரோல் டேங்கில் அமர்ந்திருந்த குழந்தையோடு சாலையில் ஓடத் தொடங்கியது. சாலையில் லாரி, கார் போன்றவை சென்றபோதிலும், எதிலும் மோதிவிடாமல் ஏறக்குறைய 300 மீட்டர் தொலைவு அந்த பைக் ஓடியது.

இந்தக் காட்சியை காரில் சென்ற கார்திக் கவுடா என்பவர் தனது செல்போன் கேமிராமூலம் படம்பிடித்துள்ளார். 300 மீட்டர் தொலைவு சென்ற அந்த பைக் சாலையின் தடுப்புச் சுவரில் விழுந்து கீழே விழுந்தது. இதில் குழந்தை தடுப்புச்சுவருக்கு இடையே வளர்க்கப்பட்டிருந்த புல்வெளியில் விழுந்ததால், காயமின்றி உயிர்பிழைத்தது. இது அதிசயமாகவே பார்க்கப்படுகிறது.

அந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. மற்றொரு பைக்கில் வந்தவர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story