கேரளா: ஆம்புலன்ஸில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து தீ விபத்து, நோயாளி பலி
கேரளாவில் ஆம்புலன்ஸ் ஒன்றில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து தீப்பற்றியதால் நோயாளி ஒருவர் உயிரிழந்தார். #KeralaPatient
திருவனந்தபுரம்,
கடந்த சில வாரங்களாக வெள்ளம், எலிக்காய்ச்சல் என துயரப்பட்டு வரும் கேரளாவில் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கேரள மாநிலம் சம்பாகுளம் பகுதியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரை ஆலப்புழா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்ப்பதற்காக ஆம்புலன்ஸ் ஒன்று தயாராக இருந்தது. இந்நிலையில் நோயாளிக்கு பொருத்தப்பட்டிருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டர் திடீரென வெடித்ததால் ஆம்புலன்ஸில் தீ பற்றியது.
தீ மள மளவென ஆம்புலன்ஸ் முழுவதும் பரவியதால் நோயாளி தீக்காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்தார். இந்நிலையில் இறந்தவரின் பெயர் மோகனன் நாயர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் ஆம்புலன்ஸில் இருந்த நர்ஸ் மற்றும் டிரைவர் படுகாயமடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதி சத்தீஷ்கர் மாநிலத்தில் இதே போல் ஆம்புலன்ஸிலுள்ள ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து 5 வயது சிறுமி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story