மாவோயிஸ்டு ஆதரவாளர்களின் வீட்டுக்காவலை செப்.12 வரை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்


மாவோயிஸ்டு ஆதரவாளர்களின் வீட்டுக்காவலை செப்.12 வரை நீட்டித்தது உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 6 Sep 2018 8:23 AM GMT (Updated: 6 Sep 2018 8:23 AM GMT)

மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் என்று கூறப்படும் 5 பேரின் வீட்டுக்காவலை செப்.12 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் நீட்டித்துள்ளது.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலம் கோரேகான்-பீமா கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் மராத்தா மற்றும் தலித் பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவரின் டெல்லி வீட்டில் சோதனையிட்ட போது, பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டிய கடிதம் கிடைத்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் ஐதராபாத், டெல்லி, அரியானா, சத்தீஷ்கார் உள்ளிட்ட மாநிலங்களில் மராட்டிய போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் என கருதப்படும் வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா, மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா, புரட்சிகர இடதுசாரி எழுத்தாளர் வரவ ராவ், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்களான ரோமிலா தாபர், பிரபாத் பட்நாயக் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட 5 பேரையும் வீட்டுக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது. இந்த வழக்கின் மறு விசாரணை வரும் செப்.6 ஆம் தேதி நடைபெறும் எனவும், அதுவரை 5 பேரையும் வீட்டுக்காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவோயிஸ்டு ஆதரவாளர்களின் வீட்டுக்காவலை செப்டம்பர் 12 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Next Story