ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேரை உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய 11 வயது சிறுவன்


ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேரை உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய 11 வயது சிறுவன்
x
தினத்தந்தி 7 Sep 2018 3:54 PM GMT (Updated: 7 Sep 2018 3:55 PM GMT)

அசாமில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 3 பேரை 11 வயது சிறுவன் துணிச்சலாக உயிரை பணையம் வைத்து காப்பாற்றி உள்ளான்.

கவுகாத்தி,

அசாம் மாநிலம் வடக்கு கெளகாத்தியில் உள்ள செயின்ட் அந்தோனி பள்ளியில் கமல் கிஷோர் என்ற 11 வயது சிறுவன் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான்.  அங்கு வடக்கு கெளகாத்தி மற்றும் கெளகாத்தி இடையே பிரம்மபுத்திரா ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. இரு நகருக்கு இடையே படகு போக்குவரத்து மட்டுமே உள்ளது. 

இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று கிஷோர் தனது அம்மா, அத்தையுடன் வடக்கு கெளகாத்தியில் இருந்து கெளகாத்தி நகருக்குச் படகில் சென்று கொண்டிருந்தான்.  இவர்களுடன் 40 பயணிகளும் இருந்தனர். 

அப்போது அவர்கள் சென்று கொண்டிருந்த படகு திடீரென்று ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.  உடனே கிஷோரின் அம்மா அவனை உடனே நீந்தி கரைக்குச் செல்லும்படி கூறினார்.

சிறுவன் கிஷோரும் ஆற்றின் கரைக்குச் சென்று திரும்பினார். பின்னர் அம்மா ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த சிறுவன் மீண்டும் ஆற்றில் குதித்து அம்மாவை மீட்டு கரைசேர்த்தான். இதையடுத்து, தன்னுடன் வந்த அத்தையை காணவில்லை என்பதை உணர்ந்த கிஷோர், மீண்டும் ஆற்றுக்குள் குதித்து அத்தையையும், மற்றும் தத்தளித்துக்கொண்டிருந்த பெண்ணையும் ஆற்றிலிருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்து சேர்த்தான்.

இந்த சம்பவம் குறித்து சிறுவன் கிஷோர் கூறுகையில்,

‘நான் தினமும் பிரம்மபுத்திரா ஆற்றில்  குதித்து நீச்சல் கற்றுக்கொள்வேன்.  ஆற்றில் படகு கவிழந்ததும் அனைவரும் வந்து விடுவார்கள் என்று முதலில் நினைத்தேன். பின்னர் தான் எனது அம்மாவுக்கு நீச்சல் தெரியாது என்பதை உணர்ந்து, உடனடியாக அம்மா, அத்தையை மீட்டேன்.  எல்லாம் 20 நிமிடங்களில் முடிந்து விட்டது. கடைசியாக பர்தா அணிந்திருந்த ஒரு அக்காவை காப்பாற்றினேன். ஆனால், அவர் கையில் ஒரு குழந்தை வைத்திருந்தார். குழந்தையை என்னால் காப்பாற்ற முடியவில்லை. அந்த வருத்தம் எனக்கு இப்போதும் உள்ளது.

இவ்வாறு சிறுவன் கிஷோர் கூறினார்.

தன் உயிரை பொருட்படுத்தாது, 3 பேரை காப்பாற்றிய சிறுவன் கிஷோரை அந்த பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். 

Next Story