பள்ளிக்குள் புகுந்து மாணவியை கடத்த முயன்ற 3 பேர் அடித்துக் கொலை


பள்ளிக்குள் புகுந்து மாணவியை கடத்த முயன்ற 3 பேர் அடித்துக் கொலை
x
தினத்தந்தி 7 Sep 2018 10:45 PM GMT (Updated: 7 Sep 2018 10:14 PM GMT)

பீகார் மாநிலத்தின் பெகுசரை மாவட்டத்துக்கு உட்பட்ட நாராயணிபூர் கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் படித்து வருகிறார்.

பாட்னா,

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன்  நேற்று காலையில் இந்த பள்ளிக்கு  வந்த 3 பேர் அந்த மாணவியை கடத்த முயன்றனர்.

இதை தடுக்க முயன்ற ஆசிரியர்களை அவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டினர். இதைப்பார்த்த பிற மாணவர்கள் பள்ளியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே கம்பு, கற்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு ஏராளமான பொதுமக்கள் பள்ளிக்கு வந்தனர்.

அவர்களை பார்த்ததும் மாணவியை கடத்த முயன்ற 3 பேரும் தப்பி ஓட முயன்றனர். ஆனால் அவர்களை விரட்டிப்பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்த வழியாக வந்த போலீசார், கிராமத்தினரிடம் இருந்து மற்ற இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். கொல்லப்பட்டவரில் ஒருவர், அப்பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி ஆவார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெகுசரை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story