பல்வேறு காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்


பல்வேறு காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
x
தினத்தந்தி 8 Sep 2018 1:47 AM GMT (Updated: 8 Sep 2018 1:47 AM GMT)

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு போன்ற பல்வேறு காரணங்களால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாக மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். #DharmendraPradhan

புவனேஷ்வர்,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இதனால் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயித்து வந்த எண்ணெய் நிறுவனங்கள் நாளுக்கு நாள் அதன் விலையை அதிகரித்து வந்தன. 

இதனிடையே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. லிட்டருக்கு ரூ.80-ஐ தாண்டியுள்ள பெட்ரோல் விலையால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பெட்ரோலியதுறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில்,

”அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவாலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பு ஜிஎஸ்டியில் கொண்டு வரப்பட வேண்டும். விலை உயர்வால் மக்கள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பை ஜிஎஸ்டி முறைப்படி கொண்டுவரும் போது ஓவ்வொரு மக்களும் பயன் பெறுவார்கள். கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாக ஈரான், வெனிசுலா மற்றும் துருக்கி போன்ற எண்ணெய் உற்பத்தி நாடுகள் உறுதியளித்த போதிலும் அதை நிறைவேற்றவில்லை. இது கச்சா எண்ணெய் உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது” எனக் கூறினார். 

இதனிடையே எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 41 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.54 காசுகளாகவும், டீசல் 47 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.64 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story