நாடாளுமன்ற தேர்தல் வரை பா.ஜனதா தலைவராக அமித்ஷா நீடிப்பார்


நாடாளுமன்ற தேர்தல் வரை பா.ஜனதா தலைவராக அமித்ஷா நீடிப்பார்
x
தினத்தந்தி 8 Sep 2018 11:30 PM GMT (Updated: 8 Sep 2018 7:27 PM GMT)

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் வரை பா.ஜனதாவின் தலைவராக அமித்ஷா நீடிப்பார் என்று கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.

புதுடெல்லி,

பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நேற்று தொடங்கியது.

இந்த கூட்டத்துக்கு முன்னதாக கட்சியின் மாநில தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் 2014–ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை விட, 2019–ம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிக இடங்களில் கட்சி வெற்றிபெறும் என கூறினார்.

மேலும் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் மாநில சட்டசபை தேர்தல்களிலும் கட்சி வெற்றி பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார். மிகவும் மதிக்கத்தக்க, ஏற்றுக்கொள்ளக்கூடிய முகமான நரேந்திர மோடியை நாம் பிரதமராக பெற்றுள்ளோம் எனக்கூறிய அமித்ஷா, இதை முன்னிலைப்படுத்தி வெற்றி பெறவேண்டும் என்றும் தெரிவித்தார்.

அப்போது, ‘வெல்ல முடியாத பா.ஜனதா’ என்ற கோ‌ஷத்தை எழுப்பி உற்சாகத்தை வெளியிட்ட பா.ஜனதா தலைவர்கள், வருகிற தேர்தல்களில் கட்சியின் வெற்றிக்காக உழைப்போம் என உறுதி பூண்டனர்.

தற்போது பா.ஜனதாவின் தலைவராக உள்ள அமித்ஷாவின் பதவிகாலம் அடுத்த ஆண்டு(2019) ஜனவரி மாதத்துடன் முடிவடைகிறது. அமித்ஷா வகுத்துக் கொடுத்த தேர்தல் யுத்திகளின் அடிப்படையில்தான் கடந்த சில ஆண்டுகளில் நடந்த பல்வேறு சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா ஆட்சியை கைப்பற்றியது.

இதையடுத்து, அமைப்பு ரீதியாக செயல்படுவதில் சிறந்த தலைவராக திகழும் அமித்ஷா தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது என பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இதை நிரூபிக்கும் விதமாக நேற்றைய செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவருமே கட்சி பதவிகளுக்கான தேர்தல்களை தள்ளி வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர். அது ஏற்றுக் கொள்ளப்பட்டதால் பா.ஜனதாவின் உட்கட்சி தேர்தல்கள் தள்ளி வைக்கப்பட்டன.

இதுபற்றி பா.ஜனதா தலைவர் ஒருவர் கூறுகையில், ‘‘நாடாளுமன்ற தேர்தலில் நட்சத்திர பிரசார தலைவராக மோடி திகழ்வார். மேலும் விரைவில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல்களிலும் மோடியின் பிரசார பங்களிப்பு இருக்கும். அதேநேரம் அமித்ஷா தலைமையில்தான் கட்சி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும். எனவே அவர் தொடர்ந்து பா.ஜனதா தலைவராக நீடிப்பார்’’ என்று தெரிவித்தார்.

இந்த செயற்குழுவில் மோடி அரசின் ஊழலற்ற முகம், பொருளாதாரத்தை வெற்றிகரமாக கையாண்டதன் மூலம் 8.2 சதவீத உள்நாட்டு வளர்ச்சி பெற்றது, தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டங்கள் உருவாக்கியது போன்ற அம்சங்களை முன்னிலைப்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதேநேரம், அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும் இந்த செயற்குழுவில் விவாதிக்கப்படுவதுடன், இது தொடர்பான எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிக்கவும் திட்டம் வகுக்கப்படுகிறது. இதைப்போல தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரம், மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் பா.ஜனதா தலைவர்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கிறார்கள்.

முக்கியமாக விரைவில் நடைபெற இருக்கும் சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம் சட்டசபை தேர்தல்களிலும், முன்கூட்டியே நடத்தப்பட்டால் தெலுங்கானா தேர்தலிலும் கட்சி வெற்றி பெறுவது குறித்தும், நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம் வகுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இந்த செயற்குழுவில் ஆலோசனை நடத்தப்படுகிறது.

செயற்குழுவின் முடிவில் அரசியல் மற்றும் விவசாயம் தொடர்பாக 2 சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. தேசிய செயற்குழுவின் இறுதி நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார்.


Next Story