மத்தியபிரதேசத்தில் ஒரு திறந்தவெளி சிறை: குடும்பத்துடன் வாழ கைதிகளுக்கு அனுமதி


மத்தியபிரதேசத்தில் ஒரு திறந்தவெளி சிறை: குடும்பத்துடன் வாழ கைதிகளுக்கு அனுமதி
x
தினத்தந்தி 9 Sep 2018 10:45 PM GMT (Updated: 9 Sep 2018 10:02 PM GMT)

கைதிகள் மனதில் நல்ல மாற்றத்தை உருவாக்கும்நோக்கத்தில், மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் ஒரு திறந்தவெளி சிறைச்சாலை தொடங்கப்பட்டுள்ளது.

இந்தூர்,

‘தேவி அகில்யாபாய் திறந்தவெளி காலனி’ என்று அதற்கு பெயர். மாவட்ட ஜெயிலுக்கு அருகிலேயே சிறை நிர்வாகத்தின் கண்காணிப்பில், இந்த சிறைச்சாலை செயல்படுகிறது.

முதல்கட்டமாக, திருமணமான 10 கைதிகள் அங்கு தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில், ஆயுள் தண்டனை கைதிகளும் அடங்குவர். பெரும்பகுதி தண்டனை காலத்தை வேறு சிறைகளில் அனுபவித்து விட்டு, மீதி தண்டனையை அங்கு கழிப்பதற்காக, அவர்கள் வந்துள்ளனர்.

அவர்களுக்கு 2 அறைகள் கொண்ட வீடு ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு அவர்கள் மனைவி, குழந்தைகளுடன் தங்கிக் கொள்ளலாம். வெளியே வேலைக்கு சென்றும் சம்பாதிக்கலாம். காலை 8 மணிக்கு வெளியே சென்று விட்டு, மாலை 6 மணிக்குள் திரும்பி விட வேண்டும். நகர எல்லையை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை. பிள்ளைகள், பள்ளிக்கு சென்று வரலாம்.

திறந்தவெளி சிறைச்சாலைக்கு 3 காவலாளிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் அங்கு வருபவர்களின் பெயரை எழுதிய பிறகே உள்ளே அனுமதிக்கிறார்கள்.


Next Story