காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்க மக்கள் ஜனநாயக கட்சி முடிவு
காஷ்மீரில் நடைபெற உள்ள பஞ்சாயத்து தேர்தலை புறக்கணிக்க மக்கள் ஜனநாயக கட்சி முடிவு செய்துள்ளது.
ஸ்ரீநகர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரில் இந்த மாத இறுதியில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தேசிய மாநாட்டு கட்சி புறக்கணிப்பது என முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டது.
இந்த நிலையில் கட்சி கூட்டம் ஒன்றிற்கு பின் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல் மந்திரி மற்றும் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவரான மெஹ்பூபா முப்தி, சாதகமற்ற சூழ்நிலையால் தேர்தலில் எங்கள் கட்சி போட்டியிடாது. 35ஏ சட்ட பிரிவை பாதுகாக்க நாங்கள் எந்த நிலைக்கும் செல்வோம் என கூறினார்.
காஷ்மீர் மக்கள் நிறைய தியாகம் செய்து விட்டனர். 35ஏ சட்ட பிரிவினை வைத்து கொண்டு ஒருவரும் ஏமாற்ற முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த சட்ட பிரிவு மாநிலத்தில் உள்ள மக்களுக்கு சிறப்பு உரிமைகளை வழங்குகிறது. இந்த சட்ட பிரிவின்படி அசையா சொத்துகளை வெளி மாநில மக்கள் சொந்தம் கொள்ள முடியாது.
இந்நிலையில் இந்த சட்ட பிரிவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. பஞ்சாயத்து தேர்தலுக்கு பின் வழக்கை விசாரிக்கும்படி மத்திய அரசு நீதிமன்றத்திடம் கேட்டு கொண்டுள்ளது.