பெட்ரோல் ரூபாய் 55-க்கும், டீசல் ரூபாய் 50-க்கும் விற்பனை செய்ய முடியும் - நிதின் கட்காரி


பெட்ரோல் ரூபாய் 55-க்கும், டீசல் ரூபாய் 50-க்கும் விற்பனை செய்ய முடியும் - நிதின் கட்காரி
x
தினத்தந்தி 11 Sep 2018 8:57 AM GMT (Updated: 11 Sep 2018 8:57 AM GMT)

பயோ எரிபொருள் உற்பத்தியை அதிகரித்தால் பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் 55-க்கும், டீசல் ரூபாய் 50-க்கும் விற்பனை செய்ய முடியும் என நிதின் கட்காரி கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்து வருவதால் மத்திய அரசு பல்வேறு தரப்பு விமர்சனங்களை எதிர்க்கொண்டு வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது என மத்திய அரசு கூறிவிட்டது. எதிர்க்கட்சிகள் தரப்பில் போராட்டம் நடத்தப்பட்ட பின்னரும் விலை உயர்வில் எந்தஒரு மாற்றமும் இன்றி உயரே சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இப்பிரச்சனைக்கு புதிய ஐடியாவை தெரிவித்துள்ள மத்திய மந்திரி நிதின் கட்காரி, பயோ எரிபொருள் உற்பத்தியை அதிகரித்தால் விலை குறையும் என கூறியுள்ளார். 
 
சத்தீஷ்காரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய நிதின் கட்காரி,  “சத்தீஷ்காரில் விவசாயத்துறை வளர்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. நெல், கோதுமை, சிறுதானியங்கள் மற்றும் கரும்பு உற்பத்தி மாநிலத்தில் மிகவும் சிறப்பாக உள்ளது, மாநிலம் பயோ எரிபொருள் உற்பத்தியில் முக்கிய மையமாக ஆக முடியும். மாநிலத்தின் ஜாத்ரோபாவில் உள்ள பயோர் எரிபொருள் உற்பத்தி மையத்தால், விமானத்திற்கு எரிபொருள் வழங்கப்பட்டது, பயோ எரிபொருளால் இயங்கும் விமானம் தெக்ராடன்னிலிருந்து டெல்லிக்கு சென்றது. பயோ எரிபொருள் உற்பத்தியின் மையமாக மாநிலம் உருவாகினால் விவசாயிகள், பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். 

பயோ-டெக்னாலஜி தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்கு ராஞ்சியில் மையம் ஒன்றை அமைக்க வேண்டும். எத்தனால், மெதனால், பயோ-எரிபொருள் பயன்பாட்டை தொடங்கினால் பெட்ரோலியத்தை நம்பியிருப்பது குறையும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் குறையும். 
 
“ரூ. 8 லட்சம் கோடிக்கு நாம் பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றுமதி செய்கிறோம், விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. விவசாயிகள், ஆதிவாசிகள் மற்றும் மலைவாழ் மக்களால் நாட்டில் எத்தனால், மெத்தனால் மற்றும் பயோ-எரிபொருளை உருவாக்க முடியும் என்று நான் 15 ஆண்டுகளாக கூறி வருகின்றேன். பயோ எரிபொருளைப் பயன்படுத்தி முதன்முதலாக நாம் விமானத்தை இயக்கியுள்ளோம். இதுபோன்று பஸ், ஆட்டோ, வாடகை கார், போன்றவற்றுக்கு எத்தனால், பயோ எரிபொருள் கட்டாயம் ஆக்கப்படும். இது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். 

பெட்ரோலிய அமைச்சகம் 5 எத்தனால் ஆலைகளை அமைத்து வருகிறது. இதனால் நெல், கோதுமை, கரும்பு கழிவுகளில் இருந்து எரிபொருள் தயாரிக்கப்படும். இது சாத்தியமானால் இந்தியாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.50-க்கும், பெட்ரோல் விலை ரூ.55-க்கும் விற்பனை செய்ய முடியும் என கூறியுள்ளார். 

Next Story