வயிற்றின் அடி பகுதியில் மறைத்து தங்க கட்டிகளை கடத்தியவர் டெல்லி விமான நிலையத்தில் கைது
வயிற்றின் அடி பகுதியில் மறைத்து 1 கிலோ அளவுள்ள தங்க கட்டிகளை கடத்திய நபர் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி,
டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்க கட்டிகளை கடத்துவது வாடிக்கையாகி விட்டது. துபாயில் இருந்து வந்த விமானத்தில் 24 வயது பயணி ஒருவர் மீது சுங்க துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதனை அடுத்து அவரின் உடைமைகளில் விரிவான பரிசோதனை நடத்தப்பட்டது. அவரிடமும் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 1.04 கிலோ கிராம் எடை கொண்ட 9 தங்க கட்டிகளை அந்த நபர் வயிற்றின் அடி பகுதியில் மறைத்து வைத்து கடத்தியிருந்தது தெரிய வந்தது.
அவரை கைது செய்த அதிகாரிகள் ₹.32 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று மற்றொரு சம்பவத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டவர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் சென்னையை சேர்ந்தவர். மற்றொருவர் சிங்கப்பூரில் இருந்து வந்துள்ளார். அவரிடம் பிரான்ஸ் நாட்டு பாஸ்போர்ட் இருந்தது.
இவர்களிடம் நடத்திய சோதனையில் 1.5 கிலோ எடை கொண்ட ஒரு தங்க கட்டி மற்றும் 5 தங்க பிஸ்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் இருவரையும் கைது செய்தனர்.