அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி விவகாரம்: தேர்தல் கமி‌ஷன் 4 வாரத்தில் விசாரித்து முடிவு எடுக்கவேண்டும்


அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி விவகாரம்: தேர்தல் கமி‌ஷன் 4 வாரத்தில் விசாரித்து முடிவு எடுக்கவேண்டும்
x
தினத்தந்தி 13 Sep 2018 9:30 PM GMT (Updated: 13 Sep 2018 8:39 PM GMT)

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்யக்கோரும் விவகாரத்தில், 4 வாரங்களில் விசாரித்து முடிவு எடுக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு டெல்லி ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

புதுடெல்லி, 

அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை ரத்து செய்யக்கோரும் விவகாரத்தில், 4 வாரங்களில் விசாரித்து முடிவு எடுக்குமாறு தேர்தல் கமி‌ஷனுக்கு டெல்லி ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

புதிய பதவிகளை எதிர்த்து வழக்கு

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டன. இதற்காக கட்சி விதிமுறைகளில் திருத்தமும் செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த புதிய பதவிகளை ரத்து செய்யக்கோரியும், அ.தி.மு.க. கட்சி விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்தும் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி (முன்னாள் எம்.பி.) டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை முதலில் விசாரித்த நீதிபதி காமேஸ்வரராவ், இந்த வழக்கை 4 வாரத்துக்குள் விசாரித்து முடிக்க இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு கடந்த ஆகஸ்டு 21–ந் தேதி உத்தரவிட்டார்.

மேல்முறையீடு

இந்த உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனு நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, ரேகா பாலி ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே கடந்த மாதம் டெல்லி ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தரப்பில் வாதிடப்பட்டது.

நீதிபதிகள் உத்தரவு

ஆனால் அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து தேர்தல் கமி‌ஷன் 4 வாரங்களுக்குள் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தங்கள் எழுத்துப்பூர்வமான வாதங்களை தேர்தல் கமி‌ஷனிடம் 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவேண்டும் கூறினார்கள்.

மேலும் இந்த வழக்கில் சசிகலாவும் ஒரு தரப்பாக சேர்க்கப்பட்டு உள்ளதால், அவரும் தனது தரப்பு வாதங்களை தேர்தல் கமி‌ஷனிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story