விவேகானந்தர் உரையாற்றிய ஆண்டு விழா: மம்தா பானர்ஜி அமெரிக்கா செல்வதற்கு அனுமதி மறுப்பா?


விவேகானந்தர் உரையாற்றிய ஆண்டு விழா: மம்தா பானர்ஜி அமெரிக்கா செல்வதற்கு அனுமதி மறுப்பா?
x
தினத்தந்தி 13 Sep 2018 11:30 PM GMT (Updated: 13 Sep 2018 9:11 PM GMT)

சிகாகோ நகரில் நடைபெறும் ஆன்மிக நிகழ்வில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்வதற்கு மம்தா பானர்ஜிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி, 

சிகாகோ நகரில் நடைபெறும் ஆன்மிக நிகழ்வில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்வதற்கு மம்தா பானர்ஜிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

மம்தாவுக்கு அழைப்பு

சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோ நகரில் வரலாற்று சிறப்பு மிக்க உரை நிகழ்த்தியதன் 125–வது ஆண்டையொட்டி அங்கு பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் அங்குள்ள விவேகானந்த வேதாந்தா சமூகம் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு மேற்கு வங்க முதல்–மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜிக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதை ஏற்றுக்கொண்ட அவரும், அந்த நிகழ்வில் பங்கேற்பதாக உறுதியளித்தார். இதற்கு கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க துணை தூதரகமும் மகிழ்ச்சி வெளியிட்டு இருந்தது.

தீயசக்தியின் சதி

ஆனால் இந்த பயணத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது. பெளூர் ராமகிருஷ்ண மடத்தில் கடந்த 11–ந் தேதி நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போது மம்தா பானர்ஜி இதை தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ‘சுவாமி விவேகானந்தர் உரையாற்றிய சிகாகோ நகருக்கு செல்ல நான் விரும்பினேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது முடியாமல் போய்விட்டது. இதற்கு பின்னால் ஒரு தீயசக்தியின் சதி இருக்கிறது. நான் அங்கு செல்வதை விரும்பாத சிலர், எனது பயணத்தை பாழடித்து விட்டனர். விவேகானந்தரின் உரையை அவர்களும் படிப்பார்கள் என நம்புகிறேன்’ என தெரிவித்தார்.

வெளியுறவுத்துறை மறுப்பு

எனினும் மம்தாவின் அமெரிக்க பயணத்தை நாங்கள் ரத்து செய்யவில்லை என மத்திய அரசு கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று கூறுகையில், ‘மம்தா பானர்ஜி சிகாகோ நிகழ்வில் பங்கேற்பது தொடர்பாக அனுமதி கேட்டு எந்த விண்ணப்பமும் எங்களுக்கு வரவில்லை. எனவே அவரது அமெரிக்க பயணத்துக்கு மத்திய அரசு அனுமதியளிக்கவில்லை என வெளியான தகவல்கள் அனைத்தும் பொய்’ என்று குறிப்பிட்டார்.

ஆனால் வெளியுறவுத்துறையின் இந்த அறிக்கையில் உண்மையில்லை என திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், செய்தி தொடர்பாளருமான டெரிக் ஓபிரையன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மத்திய அரசு நிர்ப்பந்தம்

விவேகானந்தர் உரையாற்றியதன் நினைவாக சிகாகோவில், சர்வதேச இந்து காங்கிரஸ் சார்பில் ஒரேயொரு சிறப்பு நிகழ்ச்சி மட்டுமே நடக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜனதாவும் விரும்பின. அது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பங்கேற்கும் நிகழ்ச்சிதான்.

எனவே மம்தா பானர்ஜி கலந்து கொள்ளும், விவேகானந்த வேதாந்தா சமூகத்தின் நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு அந்த அமைப்புக்கு அதிகப்படியான நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

முன்னதாக, தனது சீன பயணத்துக்கும் மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டதாக கடந்த மாதம் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி இருந்தார். இந்த சர்ச்சை ஓய்வதற்கு முன், அவரது அமெரிக்க பயணமும் ரத்து செய்யப்பட்ட விவகாரம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story