மல்லையா விவகாரத்தில் தவறான முடிவு எடுத்துவிட்டோம்: சிபிஐ சொல்கிறது


மல்லையா விவகாரத்தில் தவறான முடிவு எடுத்துவிட்டோம்: சிபிஐ சொல்கிறது
x
தினத்தந்தி 14 Sep 2018 3:37 AM GMT (Updated: 14 Sep 2018 3:37 AM GMT)

மல்லையா விவகாரத்தில் தவறான முடிவு எடுத்துவிட்டோம் என்று சிபிஐ வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.

புதுடெல்லி,

இந்திய வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்து வருகிறார்.அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான சட்ட நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது ஒருபுறமிருக்க, அவரை வெளிநாட்டுக்கு தப்ப விட்டது தொடர்பாக மத்திய அரசும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கு எண்ணெய் ஊற்றுவது போல, விஜய் மல்லையா நேற்று முன்தினம் திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டார்.

அதாவது, தான் வெளிநாடு தப்பிச் செல்லுமுன் மத்திய நிதி மந்திரியை சந்தித்து பேசியதாகவும், அப்போது அவரிடம், வங்கிக்களுடனான பிரச்சினையை தீர்க்க தயாராக இருப்பதாக கூறியதாகவும் மல்லையா தெரிவித்தார். பின்னர், இது ஒரு தற்செயல் சந்திப்பு என மாற்றி பேசினார். விஜய் மல்லையாவின் கூற்றை அருண் ஜெட்லி திட்டவட்டமாக மறுத்தார். அதேவேளையில் அருண் ஜெட்லி பொய் கூறுவதாக கூறிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, விஜய் மல்லையாவுக்கு சலுகை காட்டப்பட்டு இருப்பதாகவும் அதற்கு காரணமான அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என்றும் நேற்று கோரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே, இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட கருத்து மேலும் பரபரப்பை ஏறபடுத்தியது. அதாவது, மல்லையாவுக்கு சிபிஐ விடுத்திருந்த வலுவன லுக் அவுட் நோட்டீஸ் எப்படி நீர்த்துப் போகச் செய்யப்பட்டது, இதற்கு யார் காரணம்? அக்டோபர் 24, 2015-ல் தப்பிச் செல்வதை தடுக்கும் நோட்டீஸ், சென்றால் தெரிவிக்கவும் என்ற நோட்டீஸாக மாறியது எப்படி? என்று கேள்வி எழுப்பி டுவிட் செய்து இருந்தார். 

இந்த நிலையில், மல்லையாவை கைது செய்ய வேண்டாம், அவரது நடமாட்டத்தை கண்காணித்தாலே போதும் என லுக் அவுட் சர்குலர்களில் திருத்தம் செய்யப்பட்டதாக கூறப்படுவது பற்றி சிபிஐ வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளது. இது பற்றி சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது:-மல்லையாவை கண்காணிக்கப்படும் நபராக அறிவித்தபோது அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை. ஏனெனில் அவர், அப்போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்தார். மேலும் நாடாளுமன்ற எம்.பி.யாகவும் இருந்தார். அதன் காரணமாகவே அவரை கைது செய்யுமாறு எந்த காவல் அமைப்பிடமும் நாங்கள் வலியுறுத்தவில்லை. ஆனால், அது தவறான முடிவாக மாறிவிட்டது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story