விஜய் மல்லையாவை தப்பவிட்டது சிபிஐ, உத்தரவிட்டது பிரதமர் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு


விஜய் மல்லையாவை தப்பவிட்டது சிபிஐ, உத்தரவிட்டது பிரதமர் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 14 Sep 2018 9:53 AM GMT (Updated: 14 Sep 2018 9:53 AM GMT)

விஜய் மல்லையா வெளிநாடு தப்புவதில் பிரதமர் மோடிக்கு நேரடியாக தொடர்புள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். #VijayMallya #ArunJaitley


புதுடெல்லி,


இந்திய வங்கிகள் பலவற்றிலும் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டுவரும் குற்றவாளியாக இருக்கும் மல்லையா, லண்டனில் இருக்கிறார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. விஜய் மல்லையா வழக்கில் லண்டன் நீதிமன்றம் டிசம்பர் 10-ல் தீர்ப்பு வழங்குகிறது. கடந்த புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராகவந்த விஜய் மல்லையா பேசுகையில், நாட்டைவிட்டு புறப்படும் முன் நிதியமைச்சரை சந்தித்தேன் என்றது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது.

 அருண் ஜெட்லி தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளது, காங்கிரஸ் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருகிறது.  

இப்போது விஜய் மல்லையா வெளிநாடு தப்புவதில் பிரதமர் மோடிக்கு நேரடியாக தொடர்புள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

  “ லுக் அவுட் சுற்றறிக்கையில் கைது செய்யுங்கள் என்பதை தகவல் தெரிவியுங்கள் என திருத்தம் செய்து விஜய் மல்லையாவை சிபிஐ நேர்த்தியாக தப்பவிட்டுள்ளது. சிபிஐ நேரடியாக பிரதமரிடம் தெரிவித்துள்ளது. சர்ச்சைக்குரிய வழக்கில் பிரதமர் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ லுக் அவுட் சுற்றறிக்கையில் மாற்றம் செய்தது என்பது வியப்புக்குரியது” என்று சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார் ராகுல் காந்தி. மோசடி வழக்கில் 2015-ம் ஆண்டு ஜூலை 29-ம் தேதியே சிபிஐ வழக்குப்பதிவு செய்தும் விஜய் மல்லையாவிற்கு எதிராக நடவடிக்கையை எடுப்பதில் மோடி அரசு தோல்வியை தழுவிவிட்டது என காங்கிரஸ் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது.

Next Story