மேகாலயா: முன்னாள் முதல்-மந்திரி, காங்கிரசில் இருந்து விலகல்


மேகாலயா: முன்னாள் முதல்-மந்திரி, காங்கிரசில் இருந்து விலகல்
x
தினத்தந்தி 14 Sep 2018 9:15 PM GMT (Updated: 14 Sep 2018 8:09 PM GMT)

மேகாலயாவின் முன்னாள் முதல் மந்திரி, காங்கிரசில் இருந்து விலகினார்.

ஷில்லாங்,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மேகாலயா மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லபாங், அந்த மாநில காங்கிரசின் ஆலோசகராக இருந்து வந்தார். இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக நேற்று திடீரென அறிவித்தார். இது தொடர்பாக கட்சித்தலைமைக்கு அவர் கடிதம் அனுப்பி உள்ளார்.

காங்கிரசில் இருந்து விலகும் முடிவை தயக்கத்துடனும், கடினமான இதயத்துடனும் எடுப்பதாக அதில் கூறியுள்ள லபாங், மூத்த தலைவர்களை ஒதுக்கும் கொள்கையை கட்சித்தலைமை எடுத்துள்ளதால், இந்த முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘மூத்த மற்றும் முன்னணி தலைவர்களின் பங்களிப்பும், சேவையும் கட்சிக்கு இனி தேவையில்லை என தலைமை கருதுவதாக நான் எண்ணுகிறேன். இந்த கட்டுப்பாடு எனக்கு விரக்தியையும், கட்சியில் தொடர்வதற்கு அசவுகரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

காங்கிரஸ் சார்பில் 5 முறை முதல்-மந்திரியாக இருந்த லபாங் அந்த கட்சியில் இருந்து விலகி இருப்பது, காங்கிரசுக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது. லபாங்கின் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்துள்ள மாநில தலைவர் செலஸ்டின் லிங்டோ, லபாங்கை சமரசப்படுத்த முயற்சி செய்யப்படும் என்று கூறியுள்ளார்.



Next Story