அரியான பெண் பாலியல் பலாத்காரம் ; முக்கிய குற்றவாளி பாதுகாப்பு படையை சேர்ந்தவர்?
அரியான பெண் பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி பாதுகாப்பு படையை சேர்ந்தவர் என தெரிய வந்து உள்ளது.
புதுடெல்லி,
அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசிப்பவர் ஒரு 19 வயதுப் பெண். படிப்பில் மிகவும் கெட்டிக்காரியான அந்தப் பெண் சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக மோடியிடம் விருது பெற்றவர் ஆவார்.
அவர் நேற்று சிறப்பு பயிற்சி வகுப்புக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும் போது அவரை வழிமறித்த மூன்று வாலிபர்கள் அவரை ஒரு காரில் கடத்திச் சென்றனர். அவரை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை அந்த மூவரும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த வயலில் இருந்த மற்றவர்களும் இளைஞர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர்.
அப்போது அந்தப் பெண் சுயநினைவை இழக்கவே, அவரை பேருந்து நிலையத்தில் கொண்டு வந்து தள்ளி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அந்தப் பெண் தன்னை பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் புகாரை போலீசார் வாங்க மறுத்து உள்ளனர்.
தாம் பல போலீஸ் நிலையங்களுக்குச் சென்றதாகவும் ஆனால் புகாரை வாங்க அங்கு மறுத்த பின் அவர் நேரடியாக காவல்துறை அலுவலரிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறி உள்ளார். அவர் இந்த புகாரை பதிவு செய்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறும் போது
சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக மோடிஜியிடம் விருது பெற்றவர் எனது மகள். ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார். மோடி ஜி பெண்களை படிக்க வையுங்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்போம் என்கிறார். ஆனால் எப்படி? என் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி உள்ளார்.
அரியானாவில் பெண்களின் பாதுகாப்பு குறித்து இந்த கொடூர சம்பவம் மீண்டும் கவனத்தைத் திருப்பியது. அரியானா முதல்வர் "குற்றம் சாட்டப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என கூறி உள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட பெண் 3 குற்றவாளிகள் குறித்த தகவலை கூறி உள்ளார். தன்னை 8 முதல் 10 பேர் பாலியல் பலாத்காரம் செய்து இருக்கலாம் என கூறி உள்ளார்.
இந்த நிலையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளி ராஜஸ்தான் பாதுகாப்பு படையில் பணியாற்றியவர் என தெரியவந்து உள்ளது.
இது குறித்து டிஜிபி பிஎஸ் சாந்து கூறியதாவது:-
பிரதான குற்றம் சாட்டப்பட்டவர் ராஜஸ்தான் பாதுகாப்பு படையில் பணியாற்றி வருகிறார். அவருக்கு எதிராக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மற்ற இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கூறினார்.
சனிக்கிழமையன்று, போலீஸ் சூப்பிரெண்டு நாஜினீன் பாசின் பாதிக்கப்பட்ட பெண் சேர்க்கப்பட்டு உள்ள ரேவாரி மாவட்ட மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அந்த பெண்ணின் நிலைமை குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
"இன்று நான் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேசியிருக்கிறேன். அவளுடைய நிலைமை தற்போது சீரடைந்து உள்ளது, முக்கிய குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நாங்கள் வழக்கு குறித்த ஒவ்வொரு அம்சத்தையும் விசாரணை செய்கிறோம்" என கூறினார்.
Related Tags :
Next Story