கால்டாக்சியில் பெண் கற்பழிப்பு: டிரைவருக்கு ஆயுள் தண்டனை உறுதி - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு


கால்டாக்சியில் பெண் கற்பழிப்பு: டிரைவருக்கு ஆயுள் தண்டனை உறுதி - டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 15 Sep 2018 9:45 PM GMT (Updated: 15 Sep 2018 8:37 PM GMT)

கால்டாக்சியில் பெண் கற்பழிப்பு வழக்கில், டிரைவருக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியை அடுத்த குர்கானில் நிதி அதிகாரியாக வேலை பார்த்து வந்த 25 வயதான பெண் ஒருவர், பணியை முடித்துவிட்டு டெல்லியில் உள்ள வீட்டுக்கு திரும்புகையில் வசந்த் விகார் பகுதியில் இருந்து ஊபர் கால்டாக்சியில் பயணம் செய்தார்.

அவர் கண் அயர்ந்தபோது, அந்தக் காரின் டிரைவர் சிவகுமார் யாதவ், அவரை ஆள் அரவமற்ற ஒரு பகுதிக்கு கடத்திச்சென்று, காரில் வைத்து கற்பழித்தார்.

அப்போது அவர் 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந் தேதி ‘நிர்பயா’ கற்பழிப்பின்போது குற்றவாளிகள் நடந்து கொண்டதை, அந்தப் பெண்ணிடம் சுட்டிக்காட்டி மிரட்டியும் உள்ளார்.

2014-ம் ஆண்டு நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் சிவகுமார் யாதவுக்கு விசாரணை கோர்ட்டு 2015-ம் ஆண்டு ஆயுள் சிறைத்தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எஸ். முரளிதர், வினோத் கோயல் ஆகியோர் விசாரித்து விசாரணை கோர்ட்டு வழங்கிய ஆயுள் சிறைத்தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்தனர்.

அப்போது நீதிபதிகள், கற்பழிப்பு வழக்குகளில் குற்றவாளிகளின் தண்டனையை கடுமையாக்கி சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ள போதும், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டி வருத்தம் வெளியிட்டு உள்ளனர்.

2016-ம் ஆண்டு தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டு உள்ள புள்ளி விவரங்கள்படி, அந்த ஆண்டில் 38 ஆயிரத்து 947 பெண்கள் கற்பழிக்கப்பட்டு இருப்பதாக நீதிபதிகள் தீர்ப்பில் கோடிட்டுக்காட்டி உள்ளனர்.

Next Story