ராணுவமே பாகிஸ்தானை ஆட்சி செய்கிறது; மத்திய மந்திரி வி.கே. சிங்


ராணுவமே பாகிஸ்தானை ஆட்சி செய்கிறது; மத்திய மந்திரி வி.கே. சிங்
x
தினத்தந்தி 17 Sep 2018 10:50 AM GMT (Updated: 17 Sep 2018 11:42 AM GMT)

இம்ரான் கான் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ராணுவமே பாகிஸ்தானை ஆட்சி செய்கிறது என மத்திய மந்திரி வி.கே. சிங் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

பாகிஸ்தானில் புதிய அரசு பொறுப்பேற்ற பின்னர் இந்திய எல்லை பகுதிகளில் ஊடுருவல் சம்பவங்கள் நடப்பது பற்றி மத்திய வெளிவிவகார துறை இணை மந்திரி வி.கே. சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்து அவர் இன்று பேசும்பொழுது, நீங்கள் அனைவரும் மாற்றம் ஒன்றை எதிர்பார்க்கிறீர்களா? எனக்கு அது தெரியாது.  அந்த நபருக்கு ராணுவம் (பாகிஸ்தான்) ஆதரவு வழங்கி வருகிறது.  ராணுவமே இன்னும் ஆட்சி செய்கிறது.

அதனால், அந்த நபர் தொடர்ந்து ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளாரா? அல்லது இல்லையா? என பொறுத்திருந்து என்ன நடக்கிறது என காண்போம் என்று கூறினார்.  இந்த பேட்டியில் கானின் பெயரை சிங் குறிப்பிட்டு கூறவில்லை.

இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தரப்பில் முயற்சிகள் எதுவும் தொடங்கப்பட்டு உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இந்தியாவின் கொள்கை மிக தெளிவாக உள்ளது.  அதற்கான சூழ்நிலை பலனளிக்கும் வகையில் இருக்கும்பொழுது பேச்சுவார்த்தை நடக்கும் என கூறியுள்ளார்.


Next Story