விலை குறைவு என்றால் 37 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்குவது ஏன்? காங்கிரஸ் அடுத்த கேள்வி


விலை குறைவு என்றால் 37 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்குவது ஏன்? காங்கிரஸ் அடுத்த கேள்வி
x
தினத்தந்தி 18 Sep 2018 9:36 AM GMT (Updated: 18 Sep 2018 9:36 AM GMT)

விலை குறைவு என்றால் 37 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்? என காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது, தேசத்தின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இந்திய விமான படைக்கு ரபேல் ஜெட் போர் விமானங்கள் வாங்குவதற்காக அரசு விதிகளை பின்பற்றி உலக அளவில் டெண்டர் கோரப்பட்டு ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் 2014-ல் பா.ஜ.க.வின் மோடி அரசு பொறுப்பேற்றதும் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ரூ.1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், பா.ஜனதா அதனை மறுக்கிறது. 
 
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், 2016–ம் ஆண்டு, 36 ரபேல் போர் விமானங்களை ரூ.58 ஆயிரம் கோடி செலவில் கொள்முதல் செய்ய பிரான்ஸ் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம். இதில்தான், ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கூறுகிறது. 
தலா ரூ.526 கோடிக்கு காங்கிரஸ் வாங்க நினைத்த போர் விமானங்கள், வெறுமனே பறப்பதற்கும், தரை இறங்குவதற்கும் மட்டுமே உரியவை. ஆனால், நாங்கள் வாங்குவது, போர் தளவாடங்கள், இதர தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்ட முழுமையான போர் விமானங்கள். இவை அதைவிட உயர் தரத்துடன் இருக்கும்.

காங்கிரஸ் ஆட்சியில் வாங்க நினைத்த விலையை விட 9 சதவீதம் விலை குறைவாகவே இவற்றை வாங்குகிறோம். இந்த விமானங்கள், அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடக்கவில்லை. இப்பிரச்சினைக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். பிரதமர் மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அவர் ஊழல்வாதி அல்ல என்று அவர்களுக்கு தெரியும். இந்த விவகாரத்தில், எதிர்க்கட்சிகளின் கவலைகளை போக்க அவர்களை அழைத்துப்பேச போவதில்லை. ஏனென்றால், அவர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல், குற்றச்சாட்டுகளை அள்ளி வீசுகிறார்கள். விமானப்படை குறித்தும் அவர்களுக்கு அக்கறை இல்லை என்றார். 

காங்கிரஸ் கேள்வி

பா.ஜனதா அரசு வாங்கும் ரபேல் விமானம் விலை குறைவு என்றால் 37 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்? என காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது. முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி பேசுகையில் மோடி அரசு தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். 2000-ம் ஆண்டே இந்திய விமானப்படைக்கு 126 விமானங்கள் வேண்டும் என்று மதிப்பிடப்படது. 2000-ம் ஆண்டைவிட இப்போது எல்லையில் அதிகமான எச்சரிக்கையை எதிர்க்கொண்டு வருகிறோம். மோடி அரசு தேச பாதுகாப்பில் சமரசம் செய்துக்கொண்டுள்ளது. அவர்கள் நாங்கள் வாங்கும் விமானங்களின் விலை குறைவுதான் என்று சொல்லி வருகிறார்கள், அப்படியென்றால் வெறும் 36 விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்?” என்று கேள்வியை எழுப்பியுள்ளார். 

Next Story