சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கு; குற்றவாளியின் மரண தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை
4 வயது சிறுமி கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு விதித்த மரண தண்டனைக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.
புதுடெல்லி,
மத்திய பிரதேசத்தின் ஷாதுல் மாவட்டத்தினை சேர்ந்த வினோத் (வயது 22) என்பவன் கடந்த வருடம் மே 13ந்தேதி 4 வயது சிறுமியை கற்பழித்து கொன்று புதரில் வீசி சென்றுள்ளான்.
இதுபற்றி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 28ந்தேதி நடந்த வழக்கு விசாரணையில் வினோத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனையும் விதித்தது. இதனை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது.
இதனை எதிர்த்து வினோத் சுப்ரீம் கோர்ட்டில் செய்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கின் உண்மையான ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் வலைதளத்தில் இன்று வெளியிடப்பட்ட உத்தரவில், குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.