“மோடிக்கு எதிராக காங்கிரஸ் சர்வதேச கூட்டணி அமைக்கிறது?” அமித்ஷாவின் சந்தேகத்திற்கு காரணம் என்ன?
“மோடிக்கு எதிராக காங்கிரஸ் சர்வதேச கூட்டணியை அமைக்கிறது?” என பா.ஜனதா தலைவர் அமித்ஷா கேள்வியை எழுப்பியுள்ளார்.
புதுடெல்லி,
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2016–ல் மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது.
இந்தநிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அளித்த பேட்டியில், ‘போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது. எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார். இதனால் இந்த விவகாரம் சூடுபிடித்து உள்ளது.
ஹாலண்டே பிரான்ஸ் அதிபராக இருந்தபோதுதான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, நினைவு கூரத்தக்கது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே வார்த்தை போர் சூடுபிடித்துள்ளது. பிற எதிர்க்கட்சிகள் அமைதியாக காணப்பட்டாலும் காங்கிரஸ் தொடர் தாக்குதலை பா.ஜனதாவிற்கு எதிராக முன்னெடுத்து வருகிறது. இந்தியாவில் இப்பிரச்சனை களோபரமாகியுள்ள நிலையில், என்னுடைய கூற்றில் மாற்றம் கிடையாது, இந்தியாதான் பரிந்துரை செய்தது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே கூறிவிட்டார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதிவிட்ட செய்தியில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல்(சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தியதை மோடி அரசு பெருமையாக கூறுவதை ரபேல் போர் விமான ஒப்பந்தத்துடன் தொடர்புபடுத்தி கிண்டல் செய்தார். ‘‘பிரதமர் மோடியும், அனில் அம்பானியும் இணைந்து இந்திய ராணுவத்தின் ரூ.1.30 லட்சம் கோடி மீது துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளனர். நாட்டுக்காக தியாகம் செய்த வீரர்கள் சிந்திய ரத்தத்தை நீங்கள்(மோடி) அவமதித்து உள்ளீர்கள். இது வெட்கக் கேடானது. மேலும் நீங்கள் இந்தியாவின் ஆன்மாவிற்கு துரோகமும் செய்து விட்டீர்கள்’’ என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி, அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடியை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். இதனை பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பவத் ஹூசைன் சவுத்ரி ரீட்விட் செய்து, பா.ஜனதா ஆட்சியை நீக்க வேண்டும் என கருத்தை பதிவு செய்திருந்தார். இதனையடுத்து அமித் ஷா இவ்விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
Rahul Gandhi says ‘Modi Hatao’
— Amit Shah (@AmitShah) September 22, 2018
Pakistan says ‘Modi Hatao’
Now Pakistan also supports Rahul Gandhi’s baseless allegations against PM Modi.
Is Congress forming an International Mahagathbandhan against PM Modi?#NaPakNaCongresshttps://t.co/eHBs0DGfBP
டுவிட்களை இணைத்து அவர் பதிவிட்டுள்ள செய்தியில் “மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று ராகுல் காந்தியும் வலியுறுத்துகிறார். இப்போது ராகுலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தானும் ஆதரவு குரல் கொடுக்கிறது. பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் பாகிஸ்தானுடன் சேர்ந்து சர்வதேச அளவில் மிகப்பெரிய கூட்டணியை அமைக்கிறதா?” என கேள்வியை எழுப்பியுள்ளார்.
Related Tags :
Next Story