ரபேல் ஒப்பந்தம் விவகாரத்தை அரசியலுக்காக காங்கிரஸ் பிரச்சனை செய்கிறது - ராஜ்நாத் சிங்


ரபேல் ஒப்பந்தம் விவகாரத்தை அரசியலுக்காக காங்கிரஸ் பிரச்சனை செய்கிறது - ராஜ்நாத் சிங்
x
தினத்தந்தி 24 Sep 2018 10:48 AM GMT (Updated: 24 Sep 2018 10:48 AM GMT)

ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் காரணமே இல்லாமல் அரசியலுக்காக காங்கிரஸ் பிரச்சனையாக்குகிறது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.


லக்னோ,

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.59 ஆயிரம் கோடிக்கு, 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு 2016–ல் மோடி அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இந்தநிலையில், பிரான்ஸ் முன்னாள் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அளித்த பேட்டியில், ‘போர் விமான ஒப்பந்தத்தில் உதிரிபாகங்களை தயாரிப்பதற்கு இந்தியாவின் சார்பில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மட்டுமே சிபாரிசு செய்யப்பட்டது. எங்களுக்கு வேறு வாய்ப்பு எதுவும் அளிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார். ஹாலண்டே பிரான்ஸ் அதிபராக இருந்தபோதுதான் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது, நினைவு கூரத்தக்கது. 

இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பேசுகையில், “ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அரசு தொடர்ந்து விளக்கமளித்து வருகிறது. காங்கிரஸ் பிரச்சனையே இல்லாத ஒருவிவகாரத்தை பிரச்சனையாக்க வேண்டும் என்று முயற்சிக்கிறது, அரசியலுக்காக இதனை காங்கிரஸ் செய்கிறது,” என கூறியுள்ளார். விமான ஒப்பந்தம் விவகாரத்தில் மோடியின் அரசு வெளிப்படையாகவே செயல்பட்டது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்றாகும் என குறிப்பிட்டுள்ளார். 

Next Story