இமாசலபிரதேசம்: பனிப்பொழிவில் சிக்கிய 45 ஐ.ஐ.டி. மாணவர்கள் மீட்பு


இமாசலபிரதேசம்: பனிப்பொழிவில் சிக்கிய 45 ஐ.ஐ.டி. மாணவர்கள் மீட்பு
x
தினத்தந்தி 25 Sep 2018 5:30 PM GMT (Updated: 25 Sep 2018 5:19 PM GMT)

இமாசலபிரதேசத்தில் பனிப்பொழிவில் சிக்கிய 45 ஐ.ஐ.டி. மாணவர்கள் மீட்கப்பட்டனர்.

சிம்லா,

இமாசல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவும், பனிப்பொழிவும் ஏற்பட்டு உள்ளது. இதில் பலர் சிக்கி தவித்து வருகிறார்கள். மீட்புப்பணிகளை அரசு முடுக்கி உள்ளது. தமிழகத்தில் இருந்து குலுமணாலிக்கு சுற்றுலா சென்ற 70 பேரும் இதில் சிக்கினர்.

இந்த நிலையில் லாகாஸ் மற்றும் ஸ்பிடி மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிக்கு மலையேறும் பயிற்சி மேற்கொள்வதற்காக ரூர்கேசா ஐ.ஐ.டி.யில் இருந்து 45 மாணவர்கள் சென்றனர். அவர்களை காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனவே அவர்கள் பனிப்பொழிவில் சிக்கி இருக்கலாம் என்றும், அவர்களை மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.

இதற்கிடையே 45 மாணவர்கள் உள்பட 300 பேர் மீட்கப்பட்டு உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவை மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்படுவதாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story