ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக்க கோரிக்கை: 10 நாட்கள் பொறுத்திருக்க சுப்பிரமணியசாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ராமர் பாலத்தை நினைவுச் சின்னமாக்க கோரிக்கை:  10 நாட்கள் பொறுத்திருக்க சுப்பிரமணியசாமிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 25 Sep 2018 9:15 PM GMT (Updated: 25 Sep 2018 8:50 PM GMT)

ராமர் பாலத்தை பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரிய மனுவுக்கு, சுப்பிரமணியசாமி 10 நாட்கள் பொறுத்திருக்க என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

தமிழ்நாட்டின் பாம்பனுக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே கடலுக்கு அடியில் உள்ள ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க கோரி பா.ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இதன் மீது பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு இதுபற்றி பதில் எதுவும் அளிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து சுப்பிரமணியசாமி நேற்று சுப்ரீம் கோர்ட்டை மீண்டும் அணுகி இதன் மீது உத்தரவு பிறப்பிக்கும்படி கோரினார். அப்போது அவர் கூறுகையில், “இந்த வழக்கு 10 வருடங்களாக நிலுவையில் உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டும் மத்திய அரசு இது தொடர்பாக பிரமாண பத்திரம் எதையும் தாக்கல் செய்யவில்லை” என்றார்.

அப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு, “இன்னும் 10 நாட்கள் பொறுத்திருங்கள். அதன்பிறகு, வாருங்கள்” என்று தெரிவித்தனர்.

Next Story