ரபேல் விவகாரம்; ராகுல் முடிவில் ரா-பெயில் (ராகுலின் தோல்வி) ஆவார்: ராஜ்நாத் சிங்
ரபேல் விவகாரத்தில் மக்களை தவறாக வழி நடத்தும் ராகுல் முடிவில் ரா-பெயில் (ராகுலின் தோல்வி) ஆவார் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
கொச்சி,
கேரளாவில் பாரதீய ஜனதாவின் புதிய மாநில தலைவராக பி.எஸ். ஸ்ரீதரன் நியமிக்கப்பட்டது பற்றிய கட்சி கவுன்சில் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.
அவர் பேசும்பொழுது, நீங்கள் ஒரு பொய்யை பல முறை கூறினால் மக்கள் அதனை நம்பும்படி தள்ளப்பட்டு விடுவார்கள். ரபேல் விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் அதனை செய்து வருகின்றனர் என கூறினார்.
அது ரபேல் இல்லை. ரா-பெயில் (ராகுலின் தோல்வி). அவர் முடிவில் தோல்வி அடைவார். ரபேல் விவகாரம் பற்றிய உண்மை ராகுல் காந்திக்கு தெரியும். ஆனால் இந்த விவகாரத்தில் அவர் மக்களை தவறாக வழி நடத்தி வருகிறார் என சிங் கூறினார்.
ராகுல் காந்தியை நேரிடையாக குறிப்பிடாமல், காங்கிரஸ் தலைவர் பிரதமருக்கு எதிராக அவதூறு பேச்சுகளை பேசி வருகிறார். அவரது பதவியின் கண்ணியத்திற்கு கீழ் செல்லாமல் இருக்கும்படி காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு அறிவுரை கூற வேண்டும் என்றும் கூறினார்.