புதையல் எடுக்க சுற்றி திரிந்த மந்திரவாதிகள் எலுமிச்சையை ஆகாயத்தில் பறக்கவிட்டு பயமுறுத்தினர்


புதையல் எடுக்க சுற்றி திரிந்த மந்திரவாதிகள் எலுமிச்சையை ஆகாயத்தில் பறக்கவிட்டு  பயமுறுத்தினர்
x
தினத்தந்தி 29 Sep 2018 11:23 AM GMT (Updated: 29 Sep 2018 11:23 AM GMT)

திருப்பதி அருகே பழமையான கோவிலில் புதையல் இருப்பதாக கூறி எலுமிச்சை பழங்களை பறக்க விட்டு மந்திரவாதிகள் பூஜை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி

சித்தூர் மாவட்டம் எர்ரவாரிபாளையம் அடுத்த வெங்கடபுரம் கிராமத்தில் குன்றின் மீது பழமையான வெங்கடேஸ்வர சுவாமி கோவில் உள்ளது.

இந்த கோவில் மற்றும் கோவிலை ஒட்டி உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் புதையல் இருப்பதாக தகவல்கள் பரவின. இந்த நிலையில் புதையல் எடுப்பதற்காக மந்திரவாதிகள் பட்டாபிராமன் ரெட்டி, ஓம் பிரகாஷ்ராஜ் 2 பேரும் ஸ்ரீசக்கரம் அமைத்து எலுமிச்சை பழங்களை பறக்கவிட்டு புதையல் தேடும் மாந்திரீக பணியில் ஈடுபட்டனர்.

சத்தம் கேட்டு அங்கு சென்ற கிராம மக்கள் 2 மந்திரவாதிகளை பிடித்தனர். அவர்களுடன் இருந்தவர்கள் தப்பி ஓடினர். பிடிபட்ட 2 பேரையும் பொதுமக்கள் எர்ரவாரிபாளையம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்கள் 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:- ‘‘புகழ்பெற்ற எங்கள் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் பல்வேறு திரைப்படங்கள் படமாக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில் புதையல் எடுப்பதற்காக சிலர் மந்திரங்கள் என கூறி பூஜைகள் செய்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் இங்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர்.

எனவே போலீசாரும் வனத்துறையினரும் இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
 எலுமிச்சை பழத்தை காற்றில் பறக்கவைத்து 2 மந்திரவாதிகள் போலீசாரையே  அதிர்ச்சி அடையவைத்தனர்.   


Next Story