திருப்பதியில் தொழிலாளி படுகொலை: காஞ்சீபுரத்தை சேர்ந்த 3 பேர் கைது


திருப்பதியில் தொழிலாளி படுகொலை: காஞ்சீபுரத்தை சேர்ந்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 Sep 2018 9:30 PM GMT (Updated: 30 Sep 2018 7:12 PM GMT)

திருப்பதியில் தொழிலாளி படுகொலை சம்பவத்தில், காஞ்சீபுரத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பதி,

திருப்பதியில் தனியார் பஸ்கள் நிறுத்தப்படும் இடத்தின் அருகே 20-ந் தேதி இரவு கடப்பா மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதவரெட்டி (வயது 40) கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியபோது கொலையாளிகள் காஞ்சீபுரத்தில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார், காஞ்சீபுரம் வந்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த காஞ்சீபுரத்தைச் சேர்ந்த ஆர்.தாமோதரன் (20), கே.ராஜசேகர் (24), டி.சக்தி (20) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் மாதவரெட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

சம்பவத்தன்று திருப்பதிக்கு சென்ற 3 பேரும் மருத்துவ சிகிச்சைக்காக கடப்பாவில் இருந்து திருப்பதிக்கு வந்த மாதவ ரெட்டியை பணத்துக்காக கொலை செய்துள்ளனர். பின்பு அவரிடம் இருந்த ரூ.2 ஆயிரத்தை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கைதான 3 பேரும் ஆந்திரா, தமிழகத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும், அவர்கள் மீது இரு மாநிலங்களில் பல கொலை வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.



Next Story