மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கார் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - சமாஜ்வாடி கட்சி


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கார் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை - சமாஜ்வாடி கட்சி
x
தினத்தந்தி 6 Oct 2018 11:15 PM GMT (Updated: 6 Oct 2018 8:57 PM GMT)

மத்திய பிரதேசம், சத்தீஸ்கார், ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என சமாஜ்வாடி கட்சியும் அறிவித்து உள்ளது.

லக்னோ,

மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளை இந்த மெகா கூட்டணியில் சேர்த்து இருந்தது.

ஆனால் இந்த கூட்டணியில் சமீபத்தில் விரிசல் ஏற்பட்டது. காங்கிரஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிய பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, விரைவில் நடைபெற இருக்கும் சில மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார்.

இதன் தொடர்ச்சியாக தற்போது சமாஜ்வாடி கட்சியும், நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி கிடையாது என அறிவித்து உள்ளது. லக்னோவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், இது தொடர்பாக கூறியதாவது:–

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட தேர்தல்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி இன்னும் காத்திருப்பு நிலையிலேயே இருக்கிறது. கூட்டணி வி‌ஷயத்தில் காங்கிரசின் முடிவுக்காக நாங்கள் எவ்வளவு காலம்தான் காத்திருக்க முடியும்? வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு முடியும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டுமா?

மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் எங்கள் கட்சி 4–வது இடத்தில் இருக்கிறது. ஆனால் கூட்டணி வி‌ஷயத்தில் காங்கிரசின் அணுகுமுறை சரியில்லை. எனவே ராஜஸ்தான், சத்தீஸ்கார் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என முடிவு செய்துள்ளோம். மாறாக கொடுவன கந்த்ராந்திர கட்சியுடன் சமாஜ்வாடி கூட்டணி அமைக்கும்.

அதேநேரம் அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் இணையும் விவகாரத்தில் நாங்கள் திறந்த மனதுடனே இருக்கிறோம். காங்கிரஸ் கட்சியை நாங்கள் மதிக்கிறோம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக பின்னர் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.


Next Story