நக்சலைட்டுகளுக்கு விற்க ஆயுதங்களை திருடியதற்காக ஆயுத படை வீரர் மற்றும் நண்பர் கைது


நக்சலைட்டுகளுக்கு விற்க ஆயுதங்களை திருடியதற்காக ஆயுத படை வீரர் மற்றும் நண்பர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2018 11:59 AM GMT (Updated: 10 Oct 2018 11:59 AM GMT)

சத்தீஷ்காரில் பாதுகாப்பு படை முகாமில் இருந்து ஆயுதங்களை திருடி நக்சலைட்டுகளுக்கு விற்க முயன்ற ஆயுத படை வீரர் மற்றும் நண்பர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

ராய்பூர்,

சத்தீஷ்காரில் பிஜாப்பூர் மாவட்டத்தின் ஓஸ்ரா கிராமத்தினை சேர்ந்தவர் ராஜு குஜுர்.  இவர் சத்தீஷ்கார் ஆயுத படையின் 10வது பட்டாலியனில் (ஈ கம்பெனி) கான்ஸ்டபிளாக இருந்து வருகிறார்.  இவரது நண்பர் மித்தி நேதம்.

இந்த நிலையில், ஆயுத படை முகாமில் இருந்து 2 ரைபிள் ரக துப்பாக்கிகள் மற்றும் 70 சுற்று தோட்டாக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் திருடப்பட்டன.  அதன்பின் கடந்த திங்கட்கிழமை பைரம்கார் பகுதிக்குட்பட்ட வனபகுதியில் ஆற்றின் கரையோரம் அவை கண்டெடுக்கப்பட்டன.

கடந்த சில நாட்களாக விடுமுறையில் இருந்த குஜுரின் தொலைபேசி விவரங்கள் சந்தேக அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டன.  அதன்பின்னர் அவரிடம் நடந்த விசாரணையில், நக்சலைட்டுகளுக்கு விற்க ஆயுதங்களை திருடிய விவரத்தினை அவர் ஒப்பு கொண்டுள்ளார்.

கடந்த 5 வருடங்களாக பணத்திற்காக நக்சலைட்டுகளுக்கு தோட்டாக்களை விற்றுள்ளார்.  முதன்முறையாக துப்பாக்கிகளை விற்க அவர் முயன்றுள்ளார்.

இந்த துப்பாக்கிகளை தலா ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரைக்கும் ஒரு சுற்று கொண்ட தோட்டாக்கள் ரூ.500க்கும் விலை பேசியுள்ளார்.  குஜுரின் நண்பர் நேதம் ஆயுதங்களை கொண்டு சென்று விற்க உதவியாக இருந்துள்ளார்.

இதனை அடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  குஜுரின் வங்கி கணக்கு விவரங்கள் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.


Next Story