மீடூ வழக்குகளை விசாரிக்க மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு


மீடூ வழக்குகளை விசாரிக்க மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு
x
தினத்தந்தி 12 Oct 2018 10:46 AM GMT (Updated: 12 Oct 2018 10:46 AM GMT)

மீடூவில் வெளியாகும் சம்பவங்கள் தொடர்பாக பொது விசாரணையை மேற்கொள்ள மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #MeToo #ManekaGandhi

புதுடெல்லி,

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக வலைதளங்களில் #MeToo இயக்கம் மூலம் தகவல்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்கள். பணியிடங்களில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் தொடர்பாக அவர்கள் பதிவிடும் தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாலிவுட்டில் தொடங்கிய புயல் இப்போது இந்தியாவில் மையம் கொண்டுள்ளது. தங்களுக்கு நேரிட்டவை என பெண்கள் தெரிவிக்கும் தகவல்களை புகார்களாகவும் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தேசிய பெண்கள் ஆணையம் பாதிக்கப்பட்டவர்களிடம் தனிப்பட்ட முறையிலும் பேசி வருகிறது. மேலும், புகார்களை தெரிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

“யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று வலியுறுத்தும் மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி, பாலியல் துஷ்பிரேயக சம்பங்களில் புகார்களை தெரிவிக்க கால நிர்ணயம் செய்யக் கூடாது என கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் மீடூ மூலமாக வெளியாகும் பாலியல் குற்ற சம்பவங்கள் தொடர்பாக பொது விசாரணையை மேற்கொள்ள மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ள மேனகா காந்தி பெண்கள் அச்சமின்றி வெளிப்படையாக புகார் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்க வேண்டும். அவர்கள் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது. அவர்களுடைய வலியின் மீது எனக்கு நம்பிக்கையுள்ளது. ஒவ்வொரு புகாரும் பின்னால் அதிர்ச்சியும் இடம் பெற்றுள்ளது. மத்திய அரசு அமைக்கும் குழுவில் மூத்த நீதித்துறை மற்றும் சட்டத்துறை நிபுணர்கள் இடம் பெறுவார்கள்.

இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல் தொடர்பான விவகாரங்களை தீர்ப்பது தொடர்பான வழிமுறைகளை மெற்கொள்ளவும் குழு நடவடிக்கையை எடுக்கும் என மேனகா காந்தி தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா மற்றும் பாடகி சின்மயி, பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான தகவல்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில் மத்திய அரசு இம்முடிவை எடுத்துள்ளது. 


Next Story