அமெரிக்காவில் ‘மைக்கேல்’ புயல் காரணமாக 11 பேர் உயிரிழப்பு


அமெரிக்காவில் ‘மைக்கேல்’ புயல் காரணமாக 11 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 12 Oct 2018 12:43 PM GMT (Updated: 12 Oct 2018 12:43 PM GMT)

அமெரிக்காவில் மைக்கேல் புயல் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.



வாஷிங்டன், 


அமெரிக்காவை தாக்கிய ‘மைக்கேல்’ புயலால் பெருத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளது. புளோரிடா மாகாணத்தின் வடமேற்கு கடலோர பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தன. மணிக்கு 155 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார வயர்கள் அறுந்து விழுந்தன. விபத்து காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.  புயல் சேதம் குறித்து புளோரிடா மாகாண கவர்னர் ரிக் ஸ்காட் கூறுகையில், ‘‘இந்தப் புயலால் கற்பனைக்கும் அப்பாற்பட்ட சேதங்கள் ஏற்பட்டுள்ளன. பல குடும்பங்களின் வாழ்க்கையையே இந்தப் புயல் புரட்டிப்போட்டு விட்டது’’ என்று குறிப்பிட்டார். அமெரிக்க கடலோர காவல்படை மீட்பு பணியை தீவிரமாக செய்து வருகிறது.

பாதுகாப்பான நிலை உருவாகிற வரையில் மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். புளோரிடா, அலபாமா, ஜார்ஜியா மாகாணங்களில் மைக்கேல் புயலால் 9 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள், வணிக நிறுவனங்களில் மின்சார வினியோகம் இல்லை. புளோரிடாவில் எச்சரிக்கை விடுக்கப்பட்டும் மக்கள் வெளியேறவில்லை என்று கூறப்படுகிறது. வெள்ளம் மற்றும் இடிபாடுகள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது எனவும் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story