மதுரை அருகே குருவித்துறை பெருமாள் கோவிலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை


மதுரை அருகே குருவித்துறை பெருமாள் கோவிலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளை
x
தினத்தந்தி 14 Oct 2018 12:53 PM GMT (Updated: 14 Oct 2018 12:53 PM GMT)

மதுரை அருகே குருவித்துறை பெருமாள் கோவலில் 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது.


சோழவந்தான், 


 சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறையில் வைகை கரையோரம் சித்திர ரத வல்லபபெருமாள் கோவில் உள்ளது. நேற்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை என்பதால் சிறப்பு பூஜைகள் முடிந்து மாலை அர்ச்சகர்கள் கோவிலை பூட்டி சென்றுவிட்டனர். நள்ளிரவு 12½ மணியளவில் மின் வயர்கள் உரசி தீப்பிடித்ததால் கோவிலில் உள்ள அபாய மணி ஒலித்தது. இதைக் கேட்ட காவலாளிகள் ராஜகோபுர அவசர வழியாக கோவிலின் உள்ளே சென்று சுற்றி பார்த்தனர். 

வயரில் குரங்குகள் அல்லது பறவைகள் உரசியதால் தீப்பிடித்திருக்கலாம் என நினைத்து அபாய ஒலி சத்தத்தை நிறுத்திவிட்டு வந்து விட்டனர். அதிகாலை கோவில் ஊழியர் மணிகண்டன் கோவிலின் வடக்கு பகுதிக்கு சென்றபோது அங்குள்ள சுவரில் வேட்டியால் கயிறுபோல் கட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி கோவில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்படட்து. பின்னர் கோவில் வாசல் கதவை திறந்து உள்ளே சென்றபோது அங்கிருந்த பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, சீனிவாச பெருமாள் ஆகிய 4 ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.



இதனால் அதிர்ச்சி அடைந்த கோவில் செயல் அலுவலர் காடுபட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் துப்பறியும் நாய், கைரேகை நிபுணர்கள், தடயஅறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். இங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து தனிப்படை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவிலில் கொள்ளை போன சிலைகளின் மதிப்பு பல லட்சம் இருக்கும் என தெரிகிறது. இந்த கோவிலில் 1971–ம் ஆண்டு 2 ஐம்பொன் சிலைகள் திருட்டுபோனது. பின்னர் அது கண்டுபிடிக்கப்பட்டு சிலைகள் மீட்கப்பட்டன. இச்சம்பவம் இப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story