கோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி? தொல்லியல் துறை புதிய தகவல்


கோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி? தொல்லியல் துறை புதிய தகவல்
x
தினத்தந்தி 16 Oct 2018 10:45 PM GMT (Updated: 16 Oct 2018 8:25 PM GMT)

புகழ் பெற்ற கோஹினூர் வைரம், 14–ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்டது. அது, 108 காரட் கொண்டது. அளவில் மிகப்பெரியது. எந்த நிறமும் இல்லாதது.

புதுடெல்லி,

கோஹினூர் வைரத்தின் மதிப்பு 20 கோடி டாலர் (ரூ.1,480 கோடி) என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், அந்த வைரம், ஆங்கிலேயர்கள் கைக்கு சென்றது. தற்போது, இங்கிலாந்தில் உள்ள ஒரு அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டு உள்ளது. கோஹினூர் வைரத்துக்கு இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இந்நிலையில், அந்த வைரம் இங்கிலாந்திடம் சென்றது எப்படி? என்று பிரதமர் அலுவலகம் தகவல் அளிக்க வேண்டும் என்று கேட்டு, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ரோகித் சபர்வால் என்பவர் விண்ணப்பித்தார். அதற்கு இந்திய தொல்லியல் துறை பதில் அளித்துள்ளது.

அதில், ‘‘டெல்லியில் உள்ள தேசிய ஆவண காப்பகத்தில் உள்ள ஆவணங்களின்படி, டல்ஹவுசி பிரபுவுக்கும், லாகூர் மகாராஜா துலீப் சிங்குக்கும் இடையே 1849–ம் ஆண்டு லாகூர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இங்கிலாந்து ராணியிடம் மகாராஜா கோஹினூர் வைரத்தை ஒப்படைத்தார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

பஞ்சாப்பை ஆண்ட மன்னரின் வாரிசுகள், கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து ராணிக்கு பரிசாக அளித்ததாக கடந்த 2016–ம் ஆண்டு மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது. ஆனால், அதற்கு முரணாக, தொல்லியல் துறை இந்த தகவலை அளித்துள்ளது.


Next Story