பாலியல் புகார் மூலம் நடிகை சுருதி ஹரிகரன் பணம் பறிக்க முயற்சி நடிகர் அர்ஜூன் குடும்பத்தினர் குற்றச்சாட்டு


பாலியல் புகார் மூலம் நடிகை சுருதி ஹரிகரன் பணம் பறிக்க முயற்சி நடிகர் அர்ஜூன் குடும்பத்தினர் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 21 Oct 2018 11:00 PM GMT (Updated: 21 Oct 2018 7:13 PM GMT)

பாலியல் புகார் மூலம் நடிகை சுருதி ஹரிகரன் பணம் பறிக்க முயற்சிக்கிறார் என்றும், அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம் என்றும் நடிகர் அர்ஜூன் குடும்பத்தினர் கூறினர்.

பெங்களூரு, 

நடிகர் அர்ஜூனும், நடிகை சுருதி ஹரிகரனும் இணைந்து நடித்த படம் ‘நிபுணன்’. இப்படம் கன்னடத்திலும் ‘விஸ்மய’ என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் நடித்தபோது, நடிகர் அர்ஜூன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று நடிகை சுருதி ஹரிகரன் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இதை நடிகர் அர்ஜூன் மற்றும் அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து அர்ஜூனின் மனைவி ஆஷா ராணி, மகள் ஐஸ்வர்யா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நடிகர் அர்ஜூன் பெண்களை மிகவும் மதிப்பவர். அவரிடம் இருந்து சுருதி ஹரிகரன் கற்க வேண்டியது நிறைய உள்ளது. அர்ஜூன் மீது அவர் கூறியுள்ள பாலியல் குற்றச்சாட்டு பொய்யானது. அவர் எப்படிப்பட்டவர் என்று எங்களுக்கு தெரியும். அவரை பற்றி தென்இந்திய சினிமா உலகிற்கு தெரியும். இந்த துன்புறுத்தல் நடந்தபோதே அவர் இதை பகிரங்கப்படுத்தி இருக்க வேண்டும்.

பாலியல் துன்புறுத்தல் நடந்திருந்தால், படம் வெளியாவதற்கு முன்பு வெளியிடப்படும் ‘பிரீமியர்’ காட்சியின்போது, அவர் எதற்காக எங்களிடம் அவ்வளவு நன்றாக பேசி இருக்க வேண்டும்?. உங்கள் தந்தையின் பெரிய ரசிகை நான் என்று என்னிடம்(ஐஸ்வர்யா), சுருதி ஹரிகரன் கூறினார்.

அர்ஜூனால் அவருக்கு பிரச்சினை ஏற்பட்டு இருந்தால், அவர் எதற்காக என்னிடம் இப்படி பேசினார்?. சுருதி ஹரிகரன் பின்னால் யாரோ இருக்கிறார்கள். அது யார் என்பது விரைவில் பகிரங்கமாகும். ‘மீ டூ’ என்பது ஒரு இயக்கமே அல்ல. அது திசை மாறி செல்கிறது. சுருதி ஹரிகரன் பற்றி அதிகளவிலான தகவல்கள் எங்களிடம் உள்ளது.

அவர் பணத்திற்காக பாலியல் குற்றச்சாட்டை கூறுகிறார் என்பது எங்களுக்கு தெரியவந்துள்ளது. பாலியல் புகார் மூலம் அவர் எங்களிடம் இருந்து பணம் பறிக்க முயற்சிக்கிறார். இந்த விவகாரத்தை நாங்கள் இத்துடன் விட மாட்டோம். சுருதி ஹரிகரன் மீது மானநஷ்ட வழக்கு தொடருவோம். அர்ஜூன் மீது இதுவரை எந்த ஒரு குற்றச்சாட்டும் வந்தது இல்லை. இந்த பாலியல் புகாரால் நாங்கள் இன்னும் மன ரீதியாக பலம் அடைந்து இருக்கிறோம். எங்கள் வீட்டு வேலைக்காரர்களுக்கு அர்ஜூனைப் பற்றி தெரியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story