தமிழகத்தில் காலையில் ஒரு மணி நேரம் இரவு ஒரு மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு


தமிழகத்தில் காலையில் ஒரு மணி நேரம் இரவு ஒரு மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
x
தினத்தந்தி 31 Oct 2018 6:43 AM GMT (Updated: 31 Oct 2018 6:43 AM GMT)

தீபாவளியன்று தமிழகத்தில் காலை 4 மணி முதல் 5 மணிவரை, இரவில் 9 மணி முதல் 10 மணிவரை பட்டாசு வெடிக்கலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

புதுடெல்லி, 

தீபாவளி அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

தீபாவளி மற்றும் தசரா பண்டிகையின் போது அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதால் காற்று மாசு அடைந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு, ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும், எனவே டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி 3 சிறுவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வாரம் தீர்ப்பு வழங்கியது.

தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்து பட்டாசு தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு அனுமதி வழங்கி அப்போது நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.

இந்த தீர்ப்பில் திருத்தம் கோரி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. 

தமிழக அரசு தரப்பில் அரசு வக்கீல் பா.வினோத் கன்னா, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி தமிழ்நாட்டுக்கு பட்டாசு வெடிக்கும் நேரம் தொடர்பான திருத்தம் கோரும் மனுவை தாக்கல் செய்திருப்பதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.  அதன் படி நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.  

அப்போது நீதிபதிகள் தமிழகத்தில்  2 மணி நேரமே பட்டாசு வெடிக்கலாம் . எந்த 2 மணிநேரம் என்பதை தமிழக அரசே முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு  இருந்தது.

இந்த நிலையில் தீபாவளியன்று தமிழகத்தில் காலை 4 மணி முதல் 5 மணிவரை, இரவில் 9 மணி முதல் 10 மணிவரை பட்டாசு வெடிக்கலாம்  என  சுப்ரீம் கோர்ட்  உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Next Story