பாந்திராவில் என்ஜினீயரை கொன்ற தொழில் அதிபர் கைது


பாந்திராவில் என்ஜினீயரை கொன்ற தொழில் அதிபர் கைது
x
தினத்தந்தி 6 Nov 2018 8:30 PM GMT (Updated: 6 Nov 2018 8:18 PM GMT)

பாந்திராவில் சண்டையை விலக்க முயன்ற போது, என்ஜினீயரை அடித்து கொன்ற தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை போரிவிலியை சேர்ந்தவர் தவால் உனத்கட்(வயது 25). தொழில் அதிபர். இவருக்கு பாந்திராவை சேர்ந்த முகமது ஆசிப் (27) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. பின்னர் திடீரென முகமது ஆசிப், தவால் உனத்கட் உடனான நட்பை துண்டித்தார். இது தொடர்பாக பேசுவதற்கு தவால் உனத்கட் சம்பவத்தன்று பாந்திராவில் உள்ள முகமது ஆசிப் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு இருவருக்கும் இடையே சண்டை உண்டானது. இதை அங்கிருந்த முகமது ஆஷிப்பின் நண்பர் வாஷியை சேர்ந்த பர்த் ராவல்(25) என்ற என்ஜினீயர் தடுக்க முயன்றார்.

இதில் கோபம் அடைந்த தவால் உனத்கட் அவரை மரத்தால் ஆன மெழுகுவா்த்தி ஸ்டாண்டால் தலையில் தாக்கினார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார். இதைப்பார்த்து பயந்து போன இருவரும் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை முடிந்து மூவரும் முகமது ஆசிப் வீட்டிற்கு திரும்பினார்கள். சிறிது நேரம் கழித்து தவால் உனத்கட் அங்கிருந்து சென்றுவிட்டார்.

பர்த் ராவலிற்கு முகமது ஆசிப் ஜூஸ் மற்றும் மருந்து கொடுத்தார். அப்போது அவருக்கு வாந்தி ஏற்பட்டது. இதனால் ஓய்வு எடுப்பதற்காக தூங்கச்சென்றார். சிறிது நேரம் கழித்து முகமது ஆசிப் அவரை எழுப்பியுள்ளார்.

ஆனால் அவர் கண் விழிக்கவில்லை. இதனால் பயந்து போன முகமது ஆசிப் ஆம்புலன்சை வரவழைத்து மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். தகவலறிந்து வந்த பாந்திரா போலீசார் என்ஜினீயரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஆசிப்பிடம் விசாரணை நடத்தினர். அப்போது தனக்கும், தவால் உனத்கட்டிற்கும் இடையே ஏற்பட்ட தகராறின் போது பர்த் ராவல், தவால் உனத்கட்டால் தாக்கப்பட்டது பற்றி கூறினார்.

இதையடுத்து போலீசாா் தவால் உனத்கட்டை அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story