டெல்லி: ஊழல் கண்காணிப்பு அதிகாரியுடன் சி.பி.ஐ. இயக்குனர் சந்திப்பு


டெல்லி: ஊழல் கண்காணிப்பு அதிகாரியுடன் சி.பி.ஐ. இயக்குனர் சந்திப்பு
x
தினத்தந்தி 8 Nov 2018 5:20 PM GMT (Updated: 8 Nov 2018 5:20 PM GMT)

டெல்லியில் உள்ள ஊழல் கண்காணிப்பு அதிகாரியை, சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா இன்று சந்தித்தார்.

புதுடெல்லி,


மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இருவரும் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினர். இதனால் அவர்களை பொறுப்பில் இருந்து விடுவித்து இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, இடைக்கால இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.

இந்த ஊழல் புகார்களை மத்திய ஊழல் கண்காணிப்பு கமி‌ஷனர் விசாரித்து வருகிறார். இந்த விசாரணையை 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என கடந்த 26-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா டெல்லியில் மத்திய ஊழல் கண்காணிப்பு கமி‌ஷனர் கே.வி.சவுத்ரியை இன்று சந்தித்தார். அப்போது தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார். மேலும் ஊழல் கண்காணிப்பு கமி‌ஷனர் சரத் குமார் மற்றும் அதிகாரிகளையும் அவர் சந்தித்தார்.

இந்த சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதைப்போல அஸ்தானாவும் மத்திய ஊழல் கண்காணிப்பு கமி‌ஷனரை சந்தித்து பேசியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

Next Story