மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் பாஜக- ராஜஸ்தான் காங்கிரஸ் வெற்றி : கருத்து கணிப்பில் தகவல்


மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் பாஜக- ராஜஸ்தான் காங்கிரஸ் வெற்றி : கருத்து கணிப்பில் தகவல்
x
தினத்தந்தி 9 Nov 2018 9:35 AM GMT (Updated: 9 Nov 2018 9:35 AM GMT)

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் ஒரு மாநிலத்திலும் பாரதீய ஜனதா 2 மாநிலத்திலும் வெற்றி பெறும் என ‘ஏபிபி-சி வோட்டர்ஸ்’நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

புதுடெல்லி,

நவம்பர் 12-ல் தொடங்கி டிசம்பர் 7-ம் தேதி வரை என ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இதுதொடர்பாக ‘ஏபிபி-சி வோட்டர்ஸ்’ நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு நேற்று வெளியானது. இதில், ராஜஸ்தான், ம.பி மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு வெற்றி முகம் தெரிகிறது.

மத்திய பிரதேசத்தில்  காங்கிரசுக்கு 40 சதவிகிதம் வாக்குகள் கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பாஜகவிற்கு 41 சதவிகிதம் வாக்குகள் கிடைப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாரதீய ஜனதாவுக்கு 116 (-49) தொகுதிகளும், காங்கிரசுக்கு 105(+47) தொகுதிகளும் மற்றவர்களுக்கு 9 தொகுதிகள் கிடைக்கும் என  கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. 

இங்கு காங்கிரஸின் முதல் அமைச்சராக ஜோதிர்ஆதித்ய சிந்தியாவிற்கு 42.5 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போதைய மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 37 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸின் மற்றொரு முக்கியத் தலைவரான கமல்நாத்திற்கு வெறும் 8.2 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவளித்துள்ளனர்.

பாரதீய ஜனதா ஆளும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானிலும் காங்கிரசுக்கு சாதகமான கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதில், காங்கிரசுக்கு 41, பாஜகவிற்கு 40சதவிகிதம் வாக்குகளும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளில் 200 சட்டசபை தொகுதிகளில் பாரதீயஜனதாவுக்கு 84 ( -79) ,காங்கிரசுக்கு 110( +89) பகுஜன் சமாஜ் கட்சிக்கு 6 தொகுதிகளும் கிடைக்கும் என கருத்துகணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

இதன்மூலம், முதல்வர் வசுந்தரா ராஜே ஆட்சிக்கு எதிரான சூழல் அதிகம் தெரிகிறது.

ராஜஸ்தானின் முதல் அமைச்சர் மீதான கருத்துக்களில் காங்கிரஸின் சச்சின் பைலட்டிற்கு 38.8 மற்றும் அசோக் கெல்லோட்டிற்கு 22, பாஜகவின் வசுந்தரா ராஜேவிற்கு 21.6 சதவிகிதம் ஆதரவு மட்டும் கிடைத்துள்ளன.

சத்தீஸ்கரிலும் பாரதீய ஜனதாவுக்கு வெற்றி கிடைக்கும் என கணிப்பு வெளியாகி உள்ளது காங்கிரசுக்கு 36 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன. இங்கு மூன்றாவது முறையாக ஆளும் பாரதீய ஜனதாவுக்கு 43 சதவிகிதம் ஆதரவு கிடைத்துள்ளது. ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு 15 சதவீத ஓட்டுகள் கிடைக்கும். மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாரதீய ஜனதா 56 தொகுதிகளும் ( +7) காங்கிரஸ் 25 (-14) தொகுதிகளும் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் மற்றும் பகுஜன் சமாஜ் கூட்டணி 9 தொகுதிகளும் கிடைக்கும் என் அக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், முதல் அமைச்சருக்கான வாய்ப்பில் தற்போதுள்ள ராமன் சிங்கிற்கும், அடுத்த நிலையில் முன்னாள் முதல்வரான அஜீத் ஜோகிக்கும் ஆதரவு கிடைத்துள்ளது. இந்த கணிப்பில், காங்கிரஸ் தலைவர்களுக்கு மூன்றாவது இடமே கிடைத்துள்ளது.

ஏபிபி-சி வோட்டர்ஸ் கருத்து கணிப்பில் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவை தேர்தலுக்கும் சேர்த்து கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. இது சட்டப்பேரவை தேர்தலுக்கு முற்றிலும் மாறாக, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் பாஜகவிற்கு அதிக சதவிகித வாக்குகள் கிடைக்கும் என தெரிய வந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு 50.2 சதவீதமும் காங்கிரசுக்கு வெறும் 37 சதவீதம் மற்றும் இதர கட்சிகளுக்கு 4.8 சதவிகிதம் வாக்குகள் கிடைத்துள்ளன. ராஜஸ்தானில், பாரதீய ஜனதாவுக்கு 47.5 சதவீதம் காங்கிரசுக்கு 36 சதவிகித ஆதரவு வாக்குகள் கிடைத்துள்ளன. சத்தீஸ்கரிலும் பாஜகவிற்கு அதிக ஆதரவாக 41.7சதவீதமும், காங்கிரசுக்கு 40.1 சதவிகித வாக்குகள் கிடைக்கும் என அந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

Next Story