பனிச்சரிவில் போராடி ஏறும் குட்டிக்கரடி! வைரலாகும் வீடியோவில் மறைந்திருக்கும் வேதனையான உண்மை!


பனிச்சரிவில் போராடி ஏறும் குட்டிக்கரடி! வைரலாகும் வீடியோவில் மறைந்திருக்கும் வேதனையான உண்மை!
x
தினத்தந்தி 9 Nov 2018 10:59 AM GMT (Updated: 9 Nov 2018 11:08 AM GMT)

ரஷியாவில் பனிச்சரிவில் குட்டிக்கரடியொன்று தாயிடம் சேர மலையில் பனிச்சரிவில் போராடி ஏறும் வீடியோவில் மறைந்திருக்கும் வேதனையான உண்மை வெளியாகியுள்ளது.

கிழக்கு ரஷியாவில் பனிபடர்ந்து இருக்கும் மலையொன்றில் கரடியொன்று அதனுடைய குட்டியுடன் போராடி ஏறும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. “உங்களுடைய முதல் முயற்சியில் வெற்றியடையவில்லை என்றால் என்ன தொடர்ந்து முயற்சியுங்கள் வெற்றி கைக்கூடும்,” என்ற கூற்றை உறுதி செய்யும் வகையில் அதில் குட்டிக் கரடியின் போராட்டம் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ ViralHog சேனலால் யூடியூப்பில் வெளியாகியது. 

தாய் கரடியுடன் மலைச்சரிவில் பனிச்சரிவில் குட்டிக்கரடி முயற்சி செய்கிறது. முதல் முயற்சியில் சிறிது தொலைவு சென்றதும் குட்டிக்கரடி கீழே சரிந்து விழுந்து விடும். மறுபடியும் முயற்சி செய்யும் இரண்டாவது முறை தாய் கரடி சென்ற பாதையை பின்பற்றி செல்லும். மலையின் உச்சியை அடையும் நிலையில் தாய் கரடி கோபமாக தட்டும். இதனால் நொடியில் அதிர்ச்சியடையும் கரடி குட்டி தடுமாறி கீழே செல்லும். ஏற்கனவே நின்ற இடத்தைவிட நீண்ட தொலைவு கீழே சென்று விடும். கீழே பாறைகள் நிறைந்த பள்ளம் இருக்கும் நிலையில். குட்டி சாதுரியமாக கற்களை பிடித்து உயிர் பிழைக்கும். மூன்றாவது முறையாக நீண்ட தொலைவு பனியில் ஏறி வெற்றியடையும். தாயுடன் மகிழ்ச்சியுடன் துள்ளிக்குதித்து செல்லும். இந்த வீடியோ பார்ப்பவர்களை மகிழ்ச்சியடையவும் செய்தது.

இந்த வீடியோ குழந்தைகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமான செய்திகளுடன் வைரலாக பரவுவது பாராட்டக்கூறியது. 

இதற்கிடையே இதில் மறைந்துள்ள ஒரு வேதனையான உண்மை வெளியாகியுள்ளது. இரண்டாவது முறையாக மலையின் உச்சியை குட்டி அடையும் போது தாய் கரடி ஆவேசமாக தட்டியது என்னவென்று தெரிய வந்துள்ளது. வீடியோ ஆளில்லா சிறிய விமானம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை மிகவும் நெருக்கமாக காட்ட வேண்டும் என்று விமானம் மிகவும் நெருக்கமாக இயக்கப்பட்டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த தாய் கரடி, குட்டியை காப்பாற்ற அதனை தட்ட முயற்சி செய்துள்ளது. இதனால் நிலைத்தடுமாறிய குட்டிக்கரடி மீண்டும் கீழே சென்றுள்ளது. இதனையடுத்து விலங்குகள் மற்றும் சூழ்நிலை ஆர்வலர்கள் கண்டங்களை தெரிவித்துள்ளார்கள். இதுபோன்ற விமானங்கள் விலங்குகளின் உயிர்களுக்கு பெரிதும் எச்சரிக்கையாக எழுந்துள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளனர். 


Next Story