மத்தியில் உள்ள மக்கள் விரோத பா.ஜனதா ஆட்சியை வீழ்த்துவதற்காக இணைந்துள்ளோம் மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு பேட்டி


மத்தியில் உள்ள மக்கள் விரோத பா.ஜனதா ஆட்சியை வீழ்த்துவதற்காக இணைந்துள்ளோம் மு.க.ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு பேட்டி
x
தினத்தந்தி 9 Nov 2018 3:13 PM GMT (Updated: 9 Nov 2018 3:13 PM GMT)

மத்தியில் உள்ள மக்கள் விரோத பா.ஜனதா ஆட்சியை வீழ்த்துவதற்காக இணைந்துள்ளோம் என்று மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.



சென்னையில்,


2019-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார். கடந்த வாரம் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசி கூட்டணியை உறுதி செய்தார். நேற்று மாலை மதசார்பற்ற ஜனதாதள தலைவர் தேவேகவுடாவை அவர் சந்தித்து பேசினார். இந்த நிலையில் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். நீண்ட நேர ஆலோசனையை அடுத்து இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். 

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், மத்தியில் உள்ள மக்கள் விரோத, தேச விரோத, மதசார்பற்ற நிலைக்கு விரோதமான மோடி தலைமையிலான மோடி அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காக ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சியை மேற்கொள்கிறார். ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசியுள்ளார். அதனை நான் வரவேற்று அறிக்கை வெளியிட்டேன். ஏற்கனவே மாநிலங்களின் உரிமைகள் மோடியின் ஆட்சியில் முழுமையாக பறிக்கப்படுகிறது, இதனை தடுத்து நிறுத்த அனைத்து மாநிலங்களில் உள்ள தலைவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மத்தியில் உள்ள பா.ஜனதா ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறோம். 

சிபிஐ, நீதிமன்றம், ஆர்பிஐ அமைப்புகள் எல்லாம் சுந்திரமாக செயல்பட வேண்டியது. ஆனால் அவற்றையும் மிரட்டும் வகையில்தான் மோடி அரசு ஆட்சி செய்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்றால் பா.ஜனதா ஆட்சியை நீக்க வேண்டும், அதற்கு அனைத்து கட்சி தலைவர்களும், அனைத்து மாநில முதல்வர்களும் இணைந்து செயல்பட வேண்டும். இம்முயற்சியை முன்னெடுத்துள்ள  சந்திரபாபு நாயுடு முன்னெடுத்துள்ளார், என்னை சந்தித்து பேசியுள்ளார். ஆதரவு அளிப்பதாக கூறியுள்ளேன். விரைவில் எல்லா மாநில தலைவர்களும் சேர்ந்து ஆலோசனையை மேற்கொண்டு என்ன நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்? என்று முடிவு எடுக்க வேண்டும் என்றார். அக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளேன் என்று கூறினார். 

சந்திரபாபு நாயுடு பேசுகையில், ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் உட்பட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டவர்களை ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைக்க முயற்சி மேற்கொள்கிறேன். சிபிஐ, ஆர்பிஐ ஆகியவற்றின் பெருமையும் புகழும் குலைக்கப்படுகிறது. சுயாட்சியாக செயல்பட வேண்டிய இந்த அமைப்புகள் இதுபோன்ற நிலையை பார்த்தது கிடையாது. ஆளுநர்களை தங்கள் விருப்பத்துக்கு மத்திய அரசு பயன்படுத்தி வருகிறது. பண மதிப்பு நீக்கத்தால் கருப்பு பணம் வெள்ளையாக்கப்பட்டு விட்டது. காங்கிரசுடன் வேறுபாடு இருந்தாலும் ராகுல் காந்தியை சந்தித்து பேசினேன். ஜனநாயகத்தை காக்க காங்கிரஸ் உட்பட அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். தனிநபர்களைப் பற்றி பேச இது நேரமல்ல, நாட்டின் நலன், ஜனநாயகமே இப்போது முக்கியம். கூட்டணியை வழிநடத்த பல தலைவர்கள் உள்ளனர், மோடியைவிட மு.க.ஸ்டாலின் கூட சிறந்தவர். எதிர்க்கட்சிகளை இணைக்கும் பணியை வெற்றிகரமாக மேற்கொள்வேன் என்று கூறியுள்ளார். 

Next Story