ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து பாக்.கவலை: இந்தியா பதிலடி


ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து பாக்.கவலை: இந்தியா பதிலடி
x
தினத்தந்தி 10 Nov 2018 2:28 AM GMT (Updated: 10 Nov 2018 2:28 AM GMT)

ஐ.என்.எஸ் அரிஹந்த் கப்பல் ரோந்து பணி குறித்து கவலை தெரிவித்த பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

புதுடெல்லி,

2016-ம் ஆண்டு இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். அரிஹந்த் என்னும் 6 ஆயிரம் டன் எடை கொண்ட அணுசக்தி நீர்மூழ்கி போர் கப்பல் இணைக்கப்பட்டது. தொடர்ந்து 10 மாதங்கள் வரை கடலுக்கு அடியிலேயே இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த கப்பல் தனது முதல் கண்காணிப்பு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.
இந்த கப்பலில் இருந்தவாறு கடல், வான், தரை இலக்குகளை நோக்கி ஏவுகணைகளை செலுத்தி துல்லியமாக தாக்குதல் நடத்த முடியும். அண்டை நாடான சீனாவை இலக்காக கொண்டும் இது தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பலின் வடிவமைப்பு, கட்டுமானம், ஏவுகணை இயக்கம் ஆகியவை அனைத்தும் உள்நாட்டின் தொழில்நுட்பத்தில் உருவானது ஆகும்.

இதையடுத்து அணுசக்தி நீர்மூழ்கி கப்பலில் இத்தகைய தொழில்நுட்பத்தை கொண்டுள்ள அமெரிக்கா, ரஷியா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய வல்லரசு நாடுகளின் வரிசையில் இந்தியாவும் இணைந்து உள்ளது.  ஆனால், இந்தியாவிடம் அணு ஆயுத கப்பல் இருப்பது தெற்காசியாவில் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்று பாகிஸ்தான் கூறியது. 

இந்த நிலையில், பாகிஸ்தான் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார்  கூறியதாவது:-
அணு ஆயுதப் பயன்பாடு தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை பல்வேறு தருணங்களில் பிரதமர் மோடி வெளிப்படுத்தியுள்ளார். அணு ஆற்றலில் இயங்கும் ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பல் தயாரிக்கப்பட்டது இந்தியாவின் ஆதிக்க கொள்கையின் வெளிப்பாடு அல்ல என்றும் மாறாக, பிராந்தியத்தில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்றும் பிரதமர் கூறியுள்ளார். இந்தியா மிகவும் பொறுப்புமிக்க தேசம். ஆனால், பொறுப்புணர்வே இல்லாத ஒரு நாடு (பாகிஸ்தான்) எங்களை விமர்சித்து கருத்து தெரிவிக்கிறது” இவ்வாறு அவர் தெரிவித்தார். 


Next Story