தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதல்; வீரர் காயம்


தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் தாக்குதல்; வீரர் காயம்
x
தினத்தந்தி 11 Nov 2018 6:57 AM GMT (Updated: 11 Nov 2018 6:57 AM GMT)

சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் நடத்திய சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் காயமடைந்து உள்ளார்.

ராய்பூர்,

சத்தீஷ்காரில் நாளை சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்கு பதிவு நடைபெற உள்ளது.  அதன்பின் வருகிற 20ந்தேதி 2வது கட்ட தேர்தல் நடைபெறும்.  தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11ந்தேதி வெளிவரும்.  இந்நிலையில், நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த அங்கு தேர்தலை புறக்கணிக்கும்படி நக்சலைட்டுகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அடங்கிய குழு ஒன்று கட்டக்கல் மற்றும் கோம் கிராமங்களுக்கு இடைப்பட்ட வன பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வரும் பணிக்காக இன்று சென்றனர்.

அவர்கள் மீது நக்சலைட்டுகள் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்துள்ளனர்.  இதில் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த துணை ஆய்வாளர் மகேந்திர சிங் என்பவர் காயமடைந்து உள்ளார்.

இதனை அடுத்து கூடுதல் படை அங்கு சென்று காயமடைந்த சிங்கை மீட்டு கொண்டு வந்தனர்.

சத்தீஷ்காரில் கடந்த 15 நாட்களில் நடைபெறும் 4வது சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதல் இதுவாகும்.  இதற்கு முன் நடந்த 3 தாக்குதல்களில் 13 பேர் பலியாகி உள்ளனர்.  அவர்களில் தேர்தல் பிரசார பணிகளை படம் பிடிக்க சென்ற தூர்தர்சன் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் ஒருவரும் அடங்குவார்.

Next Story