சட்டசபை தேர்தல்: சத்தீஷ்காரில் இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு


சட்டசபை தேர்தல்: சத்தீஷ்காரில் இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு
x
தினத்தந்தி 11 Nov 2018 11:15 PM GMT (Updated: 11 Nov 2018 9:09 PM GMT)

சத்தீஷ்காரில் இன்று முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்க உள்ளநிலையில், அங்கு பாதுகாப்பு படையினர் ஒரு லட்சம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர்

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் சட்டசபைக்கு இன்று(திங்கட்கிழமை) முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மாவோயிஸ்டுகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் ஒரு லட்சம்பேர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஷ்கார் மாநில சட்டசபையின் ஆயுட்காலம் முடிவதைதொடர்ந்து அங்கு நவம்பர் 12 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று(திங்கட்கிழமை) முதல் கட்டமாக 18 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.

இதில் 10 தொகுதிகள் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் நிறைந்த பகுதி ஆகும். மக்கள் தேர்தலை புறக்கணிக்கவேண்டும் என்று மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை விடுத்து இருக்கின்றனர். மேலும் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 15 நாட்களில் மாவோயிஸ்டுகள் 7 பெரிய தாக்குதல்களிலும் ஈடுபட்டனர். இதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

இதனால் துணை ராணுவ வீரர்கள் 65 ஆயிரம் பேரும், மாநில போலீசார் 35 ஆயிரம் பேரும் என மொத்தம் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள 10 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு ஓட்டுப் பதிவு தொடங்கி பிற்பகல் 3 மணிக்கு முடிவடைகிறது. மற்ற 8 தொகுதிகளில் காலை 8 மணிக்கு தொடங்கும் ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு முடிகிறது.

முதல்-மந்திரி ராமன் சிங் போட்டியிடும் ராஜனாந்த்கான் தொகுதியிலும் இன்று வாக்குப் பதிவு நடக்கிறது.

மீதமுள்ள 72 தொகுதிகளிலும் வருகிற 20-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை அடுத்த மாதம் 11-ந் தேதி நடைபெறும்.

15 ஆண்டுகளாக பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வரும் சத்தீஷ்காரில் இம்முறை ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

அதேநேரம் முன்னாள் முதல்-மந்திரி அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரஸ் மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் ஆகியவை அமைத்துள்ள கூட்டணியும் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலை சீர்குலைக்கும் விதமாக கான்கெர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பரிதாபமாக உயிர் இழந்தார். பீஜப்பூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் மாவோயிஸ்டு ஒருவர் கொல்லப்பட்டார்.





Next Story