சபரிமலை விவகாரத்தில் மறுஆய்வு மனுக்கள் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்: உச்ச நீதிமன்றம்


சபரிமலை விவகாரத்தில் மறுஆய்வு மனுக்கள் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்: உச்ச நீதிமன்றம்
x
தினத்தந்தி 13 Nov 2018 6:32 AM GMT (Updated: 13 Nov 2018 6:32 AM GMT)

சபரிமலை விவகாரத்தில் மறு ஆய்வு மனுக்கள் பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அங்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28–ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதற்கு அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் மற்றும் பாரதீய ஜனதா கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யமாட்டோம் என்றும், தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் அறிவித்து இருந்தார்.  இதேபோல் சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் மறுஆய்வு மனு தாக்கல் செய்வது இல்லை என்று தீர்மானித்தது.

ஆனால், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தேசிய அய்யப்ப பக்தர்கள் சார்பில் அந்த அமைப்பின் தலைவர் ஷைலஜா விஜயன் சுப்ரீம் கோர்ட்டில் மறுஆய்வு மனு தாக்கல் செய்தார்.  கடந்த அக்டோபர் 9-ந்தேதி இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. ஆனால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட், வழக்கு பட்டியலிடப்பட்ட பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தது. சபரிமலை விவகாரத்தில் ஏராளமான ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

இந்த நிலையில், ” சபரிமலை விவகாரத்தில் மறு ஆய்வு மனுக்கள் இன்று பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு, சபரிமலை தொடர்பான புதிய மனுக்கள் விசாரிக்கப்படும்” என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


Next Story